Home நாடு சைட் சாதிக் 1.12 மில்லியன் ரிங்கிட் கையாடியதாகக் குற்றச்சாட்டு!

சைட் சாதிக் 1.12 மில்லியன் ரிங்கிட் கையாடியதாகக் குற்றச்சாட்டு!

613
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் அமைச்சரான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து கட்சிக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட்  பணத்தைக் கையாடல் செய்ததற்காக இன்று அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் அவரின் வழக்கு இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) காலையில் விசாரணைக்கு வந்தபோது தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து 28 வயதான சைட் சாதிக் விசாரணை கோரினார்.

கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சிஐஎம்பி வங்கிக் காசோலையைப் பயன்படுத்தி அவர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேட்டைப் புரிந்தத்தாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அவர்மீது சுமத்தப்பட்ட 2-வது குற்றச்சாட்டில்  14-வது பொதுத் தேர்தலுக்கான 120,000 ரிங்கிட் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து நீதிபதி அசுரா சைட் சாதிக்குக்கு 330,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்தார். அவரின் அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அருகிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் மாதத்துக்கு ஒரு முறை சென்று தனது வருகையைப் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று 80 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகையை முதலில் செலுத்தவும், எஞ்சிய தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சைட் சாதிக் செலுத்தவும் அவரின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.  அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு  அமர்வு நீதிமன்றத்தில் மேலும் சில குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு தெரிவித்தது. பின்னர் அந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

“இது அரசியல் நெருக்கடி” சைட் சாதிக் சாடினார்

“என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட நீதிமன்ற வழக்கைச் சந்திக்க நான் தயார்” என சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

“இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படும்போதுதான் நான் அரசியலில் இணைந்ததற்கான உண்மையான காரணங்களை உணர்கிறேன். நான் துவண்டு விட மாட்டேன். உண்மை ஒருநாள் வெல்லும். அரசியலுக்காக என் ஆன்மாவை நான் விற்று விடமாட்டேன்” என சமூக ஊடகங்களின் வழி பதிவிட்ட காணொலியில் சைட் சாதிக் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூட்டப்படும் நேரத்தில், முக்கியமான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய நேரத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டு வந்திருக்கின்றன என்றும் கூறிய சைட் சாதிக், இப்போது ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் வேளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சைட் சாதிக்

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

அவரைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் ஹாய்ஜான் ஓமார், கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் வழக்காடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக நிதியைக் கையாண்டது, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சைட் சாதிக் மீது சுமத்தப்படுகிறது.

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராக இருந்தபோது, கட்சியின் 1.2 மில்லியன் ரிங்கிட் நிதியை அவர் முறைகேடாகக் கையாண்டார் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

பெர்சாத்து கட்சியின் சார்பில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சைட் சாதிக். அந்தக் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராகவும் இருந்தார்.

ஆனால், மொகிதின் யாசின் பிரதமராக புதிய அரசாங்கத்தை அமைத்தபோது,  சைட் சாதிக் அவருடன் இணையவில்லை. பெர்சாத்துவுடன் பிரிந்து, மூடா என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

அந்தக் கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான நீதிமன்றப் போராட்டம் நீதிமன்றத்தில் வழக்காக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் அம்லா சட்டத்தின் கீழ் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகளுக்காக ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்திலும் சைட் சாதிக் விரைவில் குற்றம் சாட்டப்படுவார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்தக் குற்றச்சாட்டுகள்?

பெட்டாலிங் ஜெயா இல்லத்தில் தனது கையிருப்பில் இருந்த 250,000 ரொக்கப் பணம் காணாமல் போய்விட்டதாக சைட் சாதிக் கடந்த ஆண்டு காவல் துறையில் புகார் செய்திருந்தார். அந்தப் பணம் தனக்கும் தனது பெற்றோர்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை முடுக்கி விட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கு சைட் சாதிக் விசாரிக்கப்பட்டார்.

அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக சைட் சாதிக் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.