Home நாடு சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள்

சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள்

614
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது இன்று வியாழக்கிழமை காலை ஜோகூர்பாரு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சைட் சாதிக் இளைஞர் விளையாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சருமாவார்.

100 ஆயிரம் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பிலான 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது இன்று கொண்டு வரப்பட்டன. அந்தக் குற்றங்களை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

#TamilSchoolmychoice

இன்றைய வழக்கு ஜோகூர்பாரு அமர்வு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, பின்னர் மற்ற வழக்குகளுடன் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட மாற்றப்பட்டது என சைட் சாதிக்கின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த வழக்குகள் இனி எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தப்படும்.

ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட சைட் சாதிக்

கடந்த ஜூலை 22-ஆம் தேதி சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து கட்சிக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட்  பணத்தைக் கையாடல் செய்ததற்காக 2 குற்றச்சாட்டுகளுடன் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து நீதிபதி அசுரா சைட் சாதிக்குக்கு 330,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்தார்.

அந்த ஜாமீன் தொகைக்காகவும் தனது வழக்கு நிதிக்காகவும் சைட் சாதிக் பொதுமக்களிடம் நன்கொடை கோரினார். அதைத் தொடர்ந்து அவருக்கு 700 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை திரண்டது.