Home நாடு நஜிப் : “நாடு திரும்புபவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தும் மொகிதினின் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது”

நஜிப் : “நாடு திரும்புபவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தும் மொகிதினின் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது”

913
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கொவிட்-19 தொற்றுக்கான 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் இனி நாடு திரும்பினால் அவர்கள் இல்லங்களிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் மொகிதின் யாசின் இன்று விடுத்திருக்கும் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது என நஜிப் துன் ரசாக் சாடினார்.

2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கான சலுகைகளை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்தார். அவர் அறிவித்த முதற்கட்ட சலுகைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10 முதல் அமுலுக்கு வருகின்றன.

மொகிதினின் அறிவிப்பால் நாடு திரும்புபவர்கள் திரிபு அடைந்த தொற்றுகளை நாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்றும் நஜிப் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது டெல்டா திரிபடைந்த கொவிட் நச்சுயிரிகள் நாட்டை உலுக்கி வருகின்ற நிலையில் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களை இல்லங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிப்பது மேலும் கூடுதலான புதிய வகை தொற்றுகளை நாட்டுக்குள் கொண்டு வரும் என நஜிப் சுட்டிக் காட்டினார்.

எனவே, மொகிதின் அரசாங்கம் செய்திருப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என நஜிப் வர்ணித்தார்.

மொகிதின் அறிவித்த சலுகைகள் என்ன?

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் தொலைக்காட்சி வழி பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த சலுகைகளின் அவற்றின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் மலேசியர்கள், மலேசியாவில் நிரந்தரமாகத் தங்கும் வசிப்பிடத் தகுதிகள் பெற்றவர்கள் இனி நாடு திரும்பியதும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
  • பள்ளிவாசல்கள், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
  • உணவகங்களில் சென்று உணவருந்தலாம். ஆனால் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உணவு உண்ணும் போது மட்டும் முகக் கவசத்தை அகற்றிக் கொள்ளலாம். உணவகங்களில் நுழையும்போது 2 தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்தும் மின்னியல் சான்றிதழைக் காட்ட வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து உணவகங்களுக்கும் உள்ளேயே அமர்ந்து உணவு உண்ணும் சலுகைகள் வழங்கப்பட்டாலும் உணவக உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • மாநிலங்களை விட்டு செல்வதற்கும் மற்ற மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளைச் சந்திக்கச் செல்வதற்கும் அனுமதி உண்டு.
  • வெளியிடங்களில் உடற்பயிற்சிகள் செய்வது, மெதுவோட்டம் போன்றவற்றுக்கும் அனுமதி உண்டு.