Home நாடு மாமன்னர், மொகிதினுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தலா?

மாமன்னர், மொகிதினுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தலா?

841
0
SHARE
Ad
ஆகஸ்ட் 4-ஆம் தேதி மொகிதின் யாசின் மாமன்னரைச் சந்தித்தபோது (கோப்புப் படம்)

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கு முன்னதாக மாமன்னரைச் சந்தித்திருக்கிறார் பிரதமர் மொகிதின் யாசின்.

அதைத் தொடர்ந்து பல்வேறு ஆரூடங்களும், செய்திகளும் பரவி வருகின்றன.

புதன்கிழமை காலையில் பிரதமரைச் சந்தித்த மாமன்னர், பெரும்பான்மையை இழந்து விட்ட அவரிடம் நிலைமையைச் சுட்டிக் காட்டியதாக ஊடகம் ஒன்று தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியலமைப்பு சட்டம் 43-இன்படி நாடாளுமன்றப் பெரும்பான்மையை ஒரு பிரதமர் இழந்து விட்டால் அவர் பதவி விலகலாம் அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்கும்படி  மாமன்னரைக் கேட்டுக் கொள்ளலாம்.

ஆனால், நாடாளுமன்றத்தின் தவணைக் காலமான 5 ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை பிரதமர் முன்வைத்தால் மாமன்னர் அதனை மறுக்கலாம்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னர் மறுத்தால் பிரதமர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.

நேற்று வெளிவந்த ஊடகச் செய்திகளின்படி பிரதமரை பதவியிலிருந்து விலகிக் கொள்ள மாமன்னர் அறிவுறுத்தவில்லை.  என்றாலும், அரசியலமைப்பு சட்டங்களின்படி அவர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாமன்னர் வலியுறுத்தியதாகவும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கின்றது.

கடந்த சில நாட்களில் அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மொகிதினை பிரதமராக ஆதரிக்கவில்லை என மாமன்னரிடம் கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து மொகிதின் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்துள்ளது தெளிவாகியுள்ளது.

அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார்? என்ன முடிவெடுப்பார்? என அரசியல் களத்தில் அனைவரும் காத்திருக்கின்றனர்.