Home நாடு அலெக்சாண்டர் நந்தா லிங்கி – 2 துணைப் பிரதமர்களில் ஒருவரா?

அலெக்சாண்டர் நந்தா லிங்கி – 2 துணைப் பிரதமர்களில் ஒருவரா?

903
0
SHARE
Ad
அலெக்சாண்டர் நந்தா லிங்கி

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றவர் என்ற முறையில் இஸ்மாயில் சாப்ரி அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் அனைவரின் கவனமும் அடுத்த துணைப் பிரதமர் யார் என்பதில் திரும்பியுள்ளன.

#TamilSchoolmychoice

நேற்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு நேர்காணல் அளித்த சரவாக்கின் துணை முதலமைச்சர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் ஜெமுட் மாசிங், துணைப் பிரதமராக நியமிக்கப்பட ஜிபிஎஸ் கூட்டணியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த அலெக்சாண்டர் நந்தா லிங்கி பொருத்தமானவர் எனக் கருத்துரைத்தார். அலெக்சாண்டர் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டால் அவருக்கு ஜிபிஎஸ் கூட்டணி ஆதரவு வழங்கும் என்றும் டான்ஶ்ரீ ஜேம்ஸ் உறுதியளித்தார்.

இஸ்மாயில் சாப்ரி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பெறுவது சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவினால்தான் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

105 நாடாளுமன்ற ஆதரவைக் கொண்டுள்ள அன்வார் இப்ராகிமுக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜிபிஎஸ் கூட்டணி ஆதரவு தந்தால் அவரே அடுத்த பிரதமராகத் தேர்வு பெறுவார்.

எனவே, ஜிபிஎஸ் கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இஸ்மாயில் சாப்ரி அலெக்சாண்டர்  நந்தா லிங்கியைத் துணைப் பிரதமராக நியமிக்கலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

2 துணைப் பிரதமர்களை நியமித்து அவர்களில் ஒருவர் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியைச் சேர்ந்தவராகவும் இருக்கும்படி இஸ்மாயில் சாப்ரி முடிவெடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அலெக்சாண்டர் நந்தா லிங்கி மொகிதின் யாசின் அமைச்சரவையில் உள்நாட்டு வாணிபத் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.