Home Photo News “இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வு! திட்டமிடப்பட்ட வியூகமா?” – டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்

“இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வு! திட்டமிடப்பட்ட வியூகமா?” – டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்

879
0
SHARE
Ad

(இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வானது திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் வியூகமா?- என்ற கோணத்தில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார், பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

மலேசிய நாட்டின் அரசியலமைப்புச் சாசனம், மக்களால் தேர்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரைப் பிரதமராகத் தேர்வு செய்யப் பேரரசருக்கு உரிமையையும் பிரதமரைத் தேர்வு செய்யும் வழிகாட்டலையும் தெளிவாக வரையறுத்திருக்கிறது.

அத்தோடு, பிரதமராகத் தேர்வு பெற்றவர் மக்களவை அல்லது மேலவை (செனெட்) உறுப்பினர்களில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்குப் பேரரசருக்குப் பரிந்துரை செய்வார். பிரதமரின் ஆலோசனைபடி பேரரசர் அமைச்சரவை உறுப்பினர்களை நியமனம் செய்வார்.

#TamilSchoolmychoice

நமது நாட்டைப் பொறுத்தமட்டில் மக்களிடையே நடத்தப்படும் கருத்துக் கணிப்பு ( opinion poll) மூலம் பிரதமரைத் தேர்வு செய்யும் முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதும், சட்டப்படிச் செல்லாததும் ஆகும். அவ்வகையிலே, கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் தேர்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பையும், ஒரு சிலர் போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் இப்ராகிமையும் பிரதமராக நியமனம் செய்ய மாமன்னரிடம் பரிந்துரை செய்தனர்.

இவர்களின் பரிந்துரையை அலசி ஆராய்ந்த பேரரசர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை தற்சமயமுள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மையாகக் காட்டுவதாலும் இஸ்மாயில் சப்ரியை மாமன்னர் நாட்டின் 9-ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பரிசான் நேசனலும் பெர்சத்து கட்சியும் கலந்தாலோசித்து இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராகப் பேரரசருக்குப் பரிந்துரை செய்தது. அம்னோவின் முழு ஆதரவைப் பெற்ற இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரை செய்வதற்குப் பரிசான் நேசனல் மற்றும் அதனின் ஆதரவுக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவைத் தந்தன.

இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில் இயங்கும் ம.இ.காவும் முழு ஆதரவு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்தது ஒரு விவேகமான அரசியல் வியூகம் என்றால் மிகையாகாது. மேலும், இஸ்மாயில் சப்ரி அரசியலுக்கும் மக்களுக்கும் புதியவரல்ல . அவர் மலாயாப் பல்கலைக்கழகச் சட்டத்துறை பட்டதாரி. பல ஆண்டுகள் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவமுண்டு. கடந்த பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்திலும் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.

இஸ்மாயில் சப்ரி தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் தொடர்ச்சி என்றால் மிகையாகாது. முன்பு பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தார். தற்பொழுது அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.

ஆகவே, புதிய அரசாங்கக் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பெரிய மாறுதல்களை மக்கள் எதிர்பார்க்காவிடினும் இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வரவும் ஒரு சில உருமாற்றங்களைச் செய்யுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி மொகிதின் யாசின் மாமன்னரைச் சந்தித்தபோது (கோப்புப் படம்)

நமது நாடு குறுகிய காலத்திலேயே இருமுறை பிரதமர் பதவி மாற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.

ஆகவே, இஸ்மாயில் சப்ரி தலைமையில் அமையவிருக்கும் அரசாங்கம் கட்சி தாவல்களைத் தடுக்கும் சட்டங்களைக் கொண்டுவர முனைப்புக் காட்டுவதோடு முகிதீன் யாசின் அவர்கள் முன்மொழிந்த ஆளுங் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படும் (bi partisan) நடைமுறையை உருவாக்க முற்படுமா?

இப்புதிய அரசாங்கம் நாட்டு மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் ஆக்ககரமான ஒற்றுமையை வளர்க்கும் முதிர்ச்சியான அரசியல் சிந்தனையை முன்னெடுக்குமா?

அடுத்து வரும் நாட்களில் நமக்குத் தெரியவரும்!