Home நாடு “ஆத்திசூடி” மலாய் மொழிபெயர்ப்பைப் பாராட்டிய அன்வார் இப்ராகிம்

“ஆத்திசூடி” மலாய் மொழிபெயர்ப்பைப் பாராட்டிய அன்வார் இப்ராகிம்

807
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், நிறைய நூல்களை வாசிப்பவர். தான் சிறையில் இருந்த போது மற்ற மொழி இலக்கியங்களையும், மற்ற மதங்கள் தொடர்பான முக்கிய நூல்களையும் நிறையப் படித்ததாக அவரே கூறியிருக்கிறார்.

பகவத் கீதை போன்ற நன்னெறி நூல்களையும் படித்திருப்பதாக அவர் ஒருமுறை தனதுரையில் குறிப்பிட்டார்.

தமிழில் ஔவையார் அருளிச் செய்த ஆத்தி சூடி என்னும் பழம்பெரும் தமிழ் நூல் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அந்த தனக்குக் கிடைத்திருப்பதாகவும் தனது முகநூலில் அண்மையில் பதிவிட்ட அவர் அந்த முயற்சியையும், பாராட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

“ஆத்தி சூடி என்பது 109 தத்துவ முதுமொழி வாக்கியங்களைக் கொண்ட நூல். 12-வது நூற்றாண்டில் ஔவையார் என்னும் தமிழ் பெண் கவிஞர் இந்தத்  தத்துவ மொழிகளை எழுத்தில் வடித்தார். அவரின் தத்துவ மொழிகளில் என்னைக் கவர்ந்தது, இரண்டு. ஒன்று “ஊக்கமது கைவிடேல்” என்ற தத்துவம். முயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடக் கூடாது என்பது உணர்த்தும்  தத்துவம். இரண்டாவது “நிலையில் பிரியேல்” – என்ற சொற்றொடர். எந்த சூழ்நிலையிலும் கொள்கையிலிருந்து விலகக் கூடாது என்பது இதன் தத்துவமாகும்.இவை இரண்டும் எனக்குப் பிடித்தவை” என்றும் அன்வார் பதிவிட்டார்.

இதுபோன்ற பழம்பெருமை வாய்ந்த நூல்கள் மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும். மாற்று மதங்களில் காணப்படும் தத்துவங்களின் சிறப்பையும், மதிப்பையும் இதனால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற முயற்சிகள் அறிவியல் பூர்வமான நமது பாரம்பரியத்தை மேலும் வளமாக்குகிறது என்பதோடு, புதிய கருத்துகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதற்கும் வகை செய்கிறது” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal