Home நாடு மலாக்கா : வாக்களிப்பு தொடங்கியது

மலாக்கா : வாக்களிப்பு தொடங்கியது

460
0
SHARE
Ad

  • 28 சட்டமன்றத் தொகுதிகள்
  • 112 வேட்பாளர்கள்
  • 217 வாக்களிப்பு மையங்கள்
  • 1,109 வாக்களிப்பு வரிசைகள்
  • 12,290 தேர்தல் பணியாளர்கள்
  • 476,037 மொத்த வாக்காளர்கள்

மலாக்கா : நாடு முழுமையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (நவம்பர் 20) காலை 8.00 மணி முதல் தொடங்கியது.

மொத்தம் 476,037 வாக்காளர்கள் இன்று நடைபெறும் மலாக்கா தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

வாக்களிப்புக்காக 217 வாக்களிப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு மையங்களில் 1,109 வரிசைகள் வாக்காளர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

12,290 தேர்தல் பணியாளர்கள் மலாக்கா தேர்தலில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

28 சட்டமன்றங்களில், தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி என 3 கூட்டணிகளும் தீவிரப் போட்டியில் இறங்கியிருக்கின்றன.

28 தொகுதிகளைக் குறிவைத்து 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற முன்கூட்டிய வாக்களிப்பில் 89.9 விழுக்காட்டினர் – 10,390 வாக்காளர்கள் – வாக்களித்தனர்.

இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு மாலை 5.30 மணிக்கு நிறைவடையும். எனினும் வாக்காளர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வந்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று இரவு 10.00 மணிக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாலை 7.00 மணியளவில் எந்தத் தொகுதியில் யார் முன்னிலை என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.