Home நாடு சீன, தமிழ்ப் பள்ளிகள் – நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்! நீதிமன்றங்கள் அல்ல! – கோபால்...

சீன, தமிழ்ப் பள்ளிகள் – நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்! நீதிமன்றங்கள் அல்ல! – கோபால் ஶ்ரீராம் எதிர்வாதம்

860
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மைய மொழியாக சீனம், தமிழ் மொழி அகற்றப்பட்டு மலாய் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என சில மலாய் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்த வழக்கை எதிர்க்கும் பிரதிவாதிகளைப் பிரதிநிதித்து கோபால் ஶ்ரீராம் வழக்கறிஞராகச் செயல்படுகிறார். நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் இயங்குவது மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி என்பதால், அவற்றின் மீதான முடிவுகளை நாடாளுமன்றமே சட்டத்திருத்தங்கள் மூலமே எடுக்க முடியும் – மாறாக நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என ஶ்ரீராம் எதிர்வழக்காடினார்.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (Gabungan Pelajar Melayu Semenanjung -GPMS), மலேசிய இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி மன்றம் (Majlis Pembangunan Pendidikan Islam Malaysia – Mappim), தேசிய எழுத்தாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Coalition of National Writers’ Associations – Gapena) ஆகிய 3 இயக்கங்களும் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.

மலேசிய அரசாங்கத்திற்கும், கல்வி அமைச்சுக்கும் எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பின்னர் இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட 11 மற்ற தரப்புகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மலேசிய சீனமொழி மன்றம், மசீச, மஇகா, கெராக்கான், புத்ரா ஆகிய கட்சிகள், சீனமொழி கல்வி அமைப்புகளான டோங் சோங்,(Dong Zhong) ஜியாவ் சோங் (Jiao Zong), தாய்மொழிப் பள்ளிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தாய்மொழிப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஆகியவைவே இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அமைப்புகளாகும்.

ஹானிப் காத்ரியின் வாதம்

நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன்னிலையில் தொடங்கிய இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட இயக்கங்களைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் ஹானிப் காத்ரி தனது வாதங்களைச் சமர்ப்பித்தார்.

வழக்கறிஞர் ஹானிப் காத்ரி

தற்போதுள்ள நிலைமை சீன, தமிழ்ப் பள்ளிகளில் தொடர்ந்தால், அவற்றில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் போதிய தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார்கள் – எனவே அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் போதிய அளவில் கிடைக்காது என ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கௌரவமான பல உரிமைகளை சீன, தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் இழக்க நேரிடும், அவர்களுக்கு அரசாங்க சேவைகளில் வேலை வாய்ப்புகளும் கிடைக்காது எனவும் ஹானிப் காத்ரி மேலும் குறிப்பிட்டார்.

தன் வாதத்தை வலியுறுத்தும் சில ஆவணங்களையும் ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கோபால் ஶ்ரீராம் எதிர்வாதம்

மலாய் அமைப்புகளின் வழக்கை எதிர்க்கும் மலேசிய சீன மொழி மன்றத்தின் சார்பாக வழக்காட ஶ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய விசாரணையில் தனது தரப்பு வாதங்களை முன்வைத்த முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான ஶ்ரீராம், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என வாதாடினார்.

“காரணம், வழக்கு தொடுத்திருக்கும் 3 தரப்புகளும் தங்களுக்குத் தாய்மொழிப் பள்ளிகளால் என்ன பாதிப்பு ஏற்பட்டன என்பதை விளக்கவில்லை. தாய்மொழிப் பள்ளிகளை நடத்தும் அரசாங்கக் கொள்கையால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், பாதிப்புகள் என்ன என்பதை வாதிகள் நிரூபிக்கத் தவறி விட்டனர். தாங்கள் சந்தித்த இழப்புகள் என்ன என்பதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக, சில மலேசிய அரசியல் சாசன விதிகளை மட்டுமே அவர்கள் எதிர்க்கின்றனர். பண ரீதியாகவோ, சொத்துடமை ரீதியாகவோ, தனிப்பட்ட வகையிலோ தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் என்ன என்பதை அவர்கள் வழக்கில் தெரிவிக்க வேண்டும்” என ஶ்ரீராம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

“மேலும் தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சனை என்பது அரசாங்கக் கொள்கை ரீதியான முடிவாகும். அதனை நாடாளுமன்றம்தான் நிர்ணயிக்க முடியும். நீதித் துறை அந்த விவகாரத்தில் தலையிட முடியாது. நமது நாடு அரசாங்க நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை என மூன்று தெளிவாக வரையறைகளுடன் செயல்படும் மலேசிய அரசியல் சாசனத்தைக் கொண்டிருக்கின்றது. இந்த 3 துறைகளுக்கு இடையில் அதிகாரப் பிரிவினைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, நாடாளுமன்றமே தாய்மொழிப் பள்ளிகள் குறித்து முடிவெடுக்க வேண்டிய சரியான களம். நீதிமன்றமல்ல! அதற்கான தரவுகளும் நீதிமன்றத்திடம் இல்லை என்பதால் இது குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் பொருத்தமான களம் அல்ல” எனவும் ஶ்ரீராம் வாதாடினார்.

நீதிமன்ற விசாரணை இன்று புதன்கிழமை (நவம்பர் 24) தொடர்ந்து நடைபெறும்.