Home இந்தியா தமிழ்நாடு முதல்வராக அண்ணா பதவியேற்ற நாள் – எழுந்த சிக்கல்கள்!

தமிழ்நாடு முதல்வராக அண்ணா பதவியேற்ற நாள் – எழுந்த சிக்கல்கள்!

2774
0
SHARE
Ad

(1967-ஆம் ஆண்டு மார்ச் 6, பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள். அந்த வரலாற்று தினத்தில் அண்ணா முதல்வராகப் பதவியேற்பதில் சில சிக்கல்களும் எழுந்தன. அவை குறித்து இந்த சிறப்புக் கட்டுரையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

1967ஆம் ஆண்டில் மார்ச் 6ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை. அனைவராலும் சுருக்கமாக அண்ணா என அழைக்கப்பட்டவர்.

30 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை தமிழ் நாட்டில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தவர். வீதிகள்தோறும் – ஊர்கள்தோறும் சளைக்காமல் சுற்றுப் பயணம் செய்து
தனது மேடைப் பேச்சு உரைகளாலும் அதன் மூலம் புகுத்திய தமிழ் உணர்வாலும் மக்களைக் கவர்ந்தவர். அதனால் ‘நாவால் நாடாண்டவர்’ என்ற அடைமொழியைப்
பெற்றவர்.

#TamilSchoolmychoice

கட்சியில் நானே எல்லாம் என்றில்லாமல் ஒரு பக்கம் படித்த
கல்வியாளர்களையும் – இன்னொரு பக்கம் அதிகம் படிக்காவிட்டாலும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களையும் – அடுத்தக் கட்டத் தலைவர்களாக
உருவாக்கியவர்.

படித்தவர்களுக்கு உதாரணம், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், போன்றவர்கள் என்றால், பள்ளிக் கல்வி அதிகம் பெறாமல், உழைப்பையும் திறனையும் திமுகவுக்கு பங்களிப்பாக வழங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் கலைஞர் கருணாநிதிக்கு!

அதேவேளையில், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். இராஜேந்திரன், கே.ஆர். இராமசாமி போன்ற சினிமாக் கலைஞர்களையும் தனது கட்சியின் மூலம் பாரபட்சமின்றி
வளர்த்துவிட்டவர் அண்ணா .

திமுக ஆட்சியைப் பிடித்ததற்கான காரணங்கள்

1967ஆம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிடுவார்கள். முதலாவது 1965ஆம் ஆண்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் தமிழர்களுக்கு திமுக
மேல் ஏற்பட்ட மதிப்பும் மரியாதையும்!

தமிழ்மொழி உரிமைகளையும் தமிழர் நலன்களையும் காப்பதற்குப் பொருத்தமான அரண் திமுகதான் என்ற எண்ணம் உள்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி
வெளிநாட்டுத் தமிழர்களிடமும் ஆழமாக வேரூன்றியது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களினால்தான்!.

அடுத்த காரணம் எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை.

காங்கிரஸிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் அண்ணா வெற்றி கண்டதும் திமுகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

அண்ணா முதல்வராவதில் எழுந்த சிக்கல்…

திமுக வெற்றி பெற்று, எல்லாம் இனிதாக முடிந்தாலும் அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்பதில் சில சிக்கல்கள் இருந்தன என்பது ஆச்சரியமான விஷயம்.

இருந்தாலும், அந்த சிக்கல்களை முறியடித்து அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றது எப்படி என்று பார்ப்போம்.

முதன் முதலில் 1957ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அடுத்து 1962 சட்டமன்றத் தேர்தலில் ஐம்பது தொகுதிகளைக் கைப்பற்றி முக்கிய எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது.

1967 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, திமுக வெற்றி பெறும் – ஆட்சி அமைக்கும் – என அண்ணாவே நினைக்கவில்லை என அந்த காலகட்ட அரசியல் சூழல் குறித்து எழுதிய பலர் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவோ என்னவோ திமுக தலைவரான அண்ணா அந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

மாறாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.

ஆனால், எதிர்பாராத விதமாக திமுக, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தையும் கைப்பற்றியது.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அண்ணாதுரை முதலமைச்சராவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநில முதலமைச்சர் ஆவதற்கு ஒருவர் அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம்
இல்லை.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாதவரும் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்த சட்ட வாய்ப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 1967இல் அண்ணா தமிழக முதலமைச்சராகி இருக்க முடியாது.

மேற்குறிப்பிட்ட சட்டவாய்ப்பு காரணமாக மார்ச் 6ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார் அண்ணா. அதற்கு முன்பாக, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டங்களின்படி ஒருவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது.

ஆனால், நமது மலேசியாவில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதனால் பலர் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர்.

1967 காலகட்டத்தில் தமிழ் நாடு சட்டமன்றம் இரு அவைகளாகச் செயல்பட்டன.

எம்எல்சி எனப்படும் மேலவை, நியமன உறுப்பினர்களால் ஆனதாகும்.

எம்எல்சி பதவியில் அண்ணா பின்னர் நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே, முதலமைச்சராகவும் தொடர்ந்தார்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அந்த சட்டமன்ற மேலவை நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

இன்றைய நிலையில் அன்று அண்ணாதுரைக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவம் மீண்டும் நிகழுமானால் அவ்வாறு முதலமைச்சராக நியமிக்கப்படுபவர் சட்டமன்ற இடைத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் முதலமைச்சராக முடியும்.

1967 மார்ச் 6-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற அண்ணா, சென்னை மாநிலம் என அழைக்கப்பட்டப் பிரதேசத்தை ‘தமிழ் நாடு’ எனப் பெயர் சூட்டினார். அன்று
அவர் விதைத்த திராவிட ஆட்சி விதை, இன்றுவரை யாராலும் வீழ்த்த முடியாத ஆல விருட்சமாக பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.

காலவோட்டத்தில் தமிழக அரசியல், திமுக– அதிமுக என இரு கிளைகளாகப் பிளவுபட்டாலும் கருணாநிதி– எம்.ஜி.ஆர். என்ற இரண்டு ஆளுமைகளின் கீழ் அணி பிரிந்து நின்றாலும் – அந்த இரண்டு தரப்புகளுமே திராவிட ஆட்சியின்
தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் பார்க்கப்பட்டன. அண்ணாவின் வாரிசுக் கட்சிகளாகத்தான் அந்த இரண்டு கட்சிகளும் இன்றுவரை மக்களால்
பார்க்கப்படுகின்றன.

-இரா.முத்தரசன்