Home நாடு “நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

“நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

700
0
SHARE
Ad

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் 1500 ரிங்கிட் எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“தேசிய மீட்சியில், மலேசியக் குடும்பத்தின் முதுகெலும்பு தொழிலாளர்கள்” எனும் கருப்பொருளோடு மலர்கிறது இந்த வருட தொழிலாளர் தினம். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு நாம் மையமாக இருக்கிறோம்
என்பதைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்கள் எழுச்சி பெற வேண்டும் எனவும் சரவணன் தெரிவித்தார்.

தனது வாழ்த்துச் செய்தியில் சரவணன் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டார்:

#TamilSchoolmychoice

மலேசியக் குடும்பத்தின் வேலை உத்தரவாதத் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி 19-இல் மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடக்கி வைத்தார். 2. 4.8 பில்லியன் நிதியுதவியோடு இந்தத் திட்டத்தில் 6 இலட்ச வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 3 இலட்ச வேலை வாய்ப்புகள் மனிதவள அமைச்சின் பெர்கேசோ வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வேலை உத்தரவாதத் திட்டத்தின் வழி வேலையில்லாதவர்கள், உடல் பேறு குறைந்தவர்கள், முன்னாள் கைதிகள், முதியவர்கள் மற்றும் வேலையில்லாத பெண்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுவர். கால ஓட்டத்தில் இவர்கள் பின் தங்கிவிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த முயற்சியில், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம், வேலை தேடுபவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கிறது.

தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் வழங்கவும் இவ்வகையான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.

இன்று முதல் தொடங்கும் குறைந்த பட்ச சம்பளம், ரி.ம.1500 சில முதலாளிகளுக்கு கடினமான சூழலை உருவாக்கும் என்பதை உணர்ந்து, 5 தொழிலாளர்களுக்கும் குறைவாகக் கொண்டிருக்கும் முதலாளிமார்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இப்போதுள்ள வேலைச் சந்தை, தொழிலாளர்கள் கைவசம் உள்ளது. முதலாளிகள் வைப்பதுதான் சட்டம் எனும் நிலை மாறிவிட்டது. பிடித்த, திறமைக்கு ஏற்ற இணையத்தள வணிகம், கிரேப் ஓட்டுதல் போன்ற கிக் (Gig) பொருளாதாரத்தில் ஈடுபடும் தேர்வு தொழிலாளர்களுக்கு உண்டு.

திறமைக்கேற்ப வருமானத்தையும் தரவல்ல இந்த துறைகளில் இப்போது 40 இலட்சம் மலேசியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவிற்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 500 ஆயிரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான் சுய தொழில் செய்பவர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தைப் பெர்கேசோ வழி மனிதவள அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

பணியில் ஏற்படும் விபத்து மற்றும் நோய்களுக்கான பாதுகாப்பை இந்தத் திட்டம் வழங்கும். மேலும் தொழிலாளர் நலன் காக்கும் முயற்சியில் கடந்த மே 3, 2021-இல் தொழிலாளர் நலன் காக்கத் தொழில் செய்வோம் எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்வழி தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தரகர் இன்றி நேரடியாக மனிதவள அமைச்சுக்குத் தெரிவிக்கலாம். இதுவரை வந்த 15 ஆயிரத்து 313 புகார்களில், 14 ஆயிரத்து 907 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மேலும் மேம்படுத்த விரைவில் 14 மொழிகளில் தயாராக உள்ளது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் உதவியோடு, 2021 முதல் 2025 வரை கட்டாய உழைப்புக்கான தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையைத் தீர்த்து, நாட்டின் நற்பெயரைப் பாதுகாப்பதில் மனிதவள அமைச்சின் கடப்பாடு இது.

2030 க்குள், திறமைவாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை, 35 சதவிகிதம் அதிகரிக்கும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

அந்த வகையில் TVET, தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்விக்கான பயிற்சிகள் வழங்க, மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் TVET தொழில்கல்வித் துறைகள், பயிற்சி மையங்கள் வழி தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழிற்புரட்சி 4.0இன் எதிர்காலச் சவால்களை ஆராய்ந்து அடையாளம் காண்பதற்கான முயற்சிகளை மனிதவள அமைச்சு முடுக்கி விட்டுள்ளது. அதிகமான இணையத்தள வல்லுநர்களை உருவாக்குவதும் அதில் அடங்கும்.

TalentCorp வழி முக்கியமான தொழில்களின் பட்டியலும், அதற்கான மனிதவளமும், திறமைகளும், தேவைகளும் அடையாளம் காணப்படும். தொழிலாளர்களின் நலனில் நாங்கள் எப்போதும் அக்கறையும், முன்னுரிமையும் வழங்குகிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மீட்டெடுப்பதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதில் தொழிலாளர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

தொழிலாளர்களின் உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதத்தையும் இதன் வழி நான் வழங்குகிறேன். இந்த வேளையில் அனைத்து இஸ்லாமிய அன்பர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்.

நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்..

மக்கள் நலன் பேணும் மனிதவள அமைச்சு
உங்கள் நலன் பேணும் உங்களில் ஒருவன்