Home நாடு “தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

658
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“கடந்த ஆண்டு நமது நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் உள்ள எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒரு சோதனையான காலகட்டமாகும். கொவிட்-19 தொற்றின் தாக்கத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம். பலர் தங்களின் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலரின் வருமானம் குறைந்தது. தொழில்கள், வணிகங்கள் முடங்கின. இருப்பினும் நமது அரசாங்கமும் பல முனைகளில் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கப் பாடுபட்டது. உதவி நிதிகள் வழங்கியது. புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூகத்திற்கு பல உதவிகள் செய்தது. பல வட்டாரங்களில் உதவி தேவைப்படுவோருக்கு உணவுப் பொருட்களுடன் கூடிய அத்தியாவசியப் பொருட்களை நமது உள்ளூர் மஇகா கிளைகள் மூலம் வழங்கினோம். தற்போது எல்லாம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு எண்டமிக் (Endemic) காலகட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பல தளர்வுகளையும் வழங்கியுள்ளதால் மக்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும். எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும். எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது. இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது” எனவும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் பலர் செல்வச் செழிப்போடும், பல வசதிகளோடும், உயர்ந்த தொழில் நிபுணர்களாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் நமது மூதாதையர்கள் சாதாரண தொழிலாளர்களாக, இரப்பர் தோட்டங்களிலும், துப்புரவுத் துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

“நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தின், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என இந்த தொழிலாளர் தினத்தில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உறுதி கூறியதோடு அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.