
கொழும்பு : இலங்கையில் பெருமளவில் பரவி வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலின் மூலமாக நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன. அவர் கப்பல் ஒன்றின் மூலம் தப்பிச் செல்வது போன்ற காணொலிக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஜூலை 9 சனிக்கிழமையன்று தனது பதவியிலிருந்து விலகினார். நாடெங்கும் எழுந்திருக்கும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக முன்வந்திருக்கிறார்.
அவரின் இல்லத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டை ஆக்கிரமித்திருப்பதாகவும், அவரின் இல்லத்தில் தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.