Home இந்தியா அதிமுக குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பொதுக்குழு முடிவு என்ன? தமிழ் நாடு முழுக்க...

அதிமுக குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பொதுக்குழு முடிவு என்ன? தமிழ் நாடு முழுக்க பரபரப்பு

375
0
SHARE
Ad

சென்னை: ஒரு பரபரப்பான சூழ்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு (இந்திய நேரப்படி) அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பும் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. பொதுக்குழு நடைபெறவிருப்பது சென்னையை அடுத்துள்ள வானகரத்தில்! வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இங்கு பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பொதுக்குழு நடைபெறும் வளாகம் முழுக்க பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டுமே காணப்படுகிறது. எங்கேயும் ஓ.பன்னீர் செல்வத்தின் படம் காணப்படவில்லை.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை விசுவரூபம் எடுத்து எழுந்திருக்கிறது. முன்னாள் முதல்வர்கள்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே தலைமைத்துவ மோதல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்திலிருந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறினார்.

அதே கூட்டத்தில் பின்னர், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்த பொதுக் குழுக் கூட்டம் இன்று ஜூலை 11-ம்தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 11-ம் தேதி காலை 9 மணிக்கு தீ்ர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.

தீர்ப்பு வெளியாகவிருக்கும் அதே தருணத்தில் இபிஎஸ் தரப்பு பொதுக் குழுவையும் நடத்த முடிவு செய்திருக்கிறது.

பழனிசாமி ஆதரவாளர்கள் அனைவரும் நேற்றிரவே சென்னை வந்துவிட்டனர். பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்குழு தடையின்றி நடைபெறுமா? உயர்நீதிமன்றம் பொதுக் குழுவைத் தடைசெய்யும் தீர்ப்பை வழங்குமா?

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இரு தரப்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

பரபரப்புடன் காத்திருக்கிறது தமிழக அரசியல் களம்!