Home நாடு ஹாடி அவாங் மீது புக்கிட் அமான் விசாரணை நடத்துகிறது

ஹாடி அவாங் மீது புக்கிட் அமான் விசாரணை நடத்துகிறது

362
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங் மீது விசாரணை நடத்தப்படுவதாக காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் அறிவித்தது.

ஹாடி அவாங்கிற்கு எதிராக இதுவரை செய்யப்பட்டு 28 புகார்களின் அடிப்படையில் அவருக்கு எதிரான விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாக பக்கிட் அமார் தொடர்புத் துறை பிரிவின் தலைவர் ஏ.ஸ்கந்தகுரு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு எதிராக தகாத முறையிலும், இனவெறியைத் தூண்டும் வகையிலும் அறிக்கைகள் விடுத்ததற்காக குற்றவியல் பிரிவு 505 (C), 2008-ஆம் ஆண்டுக்கான தொடர்பு பல்ஊடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அவர் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்கந்தகுரு தெரிவித்தார். இணைய வழி வலைப்பின்னலை துஷ்பிரயோகம் செய்வதை இந்தச் சட்டங்கள் குற்றமாக்குகின்றன.

#TamilSchoolmychoice

விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் ஆரூடங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என காவல் துறை கேட்டுக் கொள்வதாகவும் ஸ்கந்தகுருவின் அறிக்கை குறிப்பிட்டது.

இன, மத விவகாரங்களில் உணர்ச்சிகரமான அம்சங்கள் குறித்து பொது வெளியில் விவாதிப்பது பதற்றமான சூழலை உருவாக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் ஸ்கந்தகுரு தெரிவித்தார்.

மாராங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாடி அவாங் முஸ்லீம் அல்லாதவர்களாலும், பூமிபுத்ரா அல்லாதவர்களாலும்தான் ஊழல் பெருகி விட்டது என கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி  கருத்துரைத்திருந்தார்.

மலாய்க்காரர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பதால்தான் மலாய்க்காரர் அல்லாதவர்களும் நடுநிலையாளர்களும் கடந்த பொதுத் தேர்தலின் மூலம் நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்றும் தன் முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.