Home நாடு சிகாமாட் தொகுதியில் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியா?

சிகாமாட் தொகுதியில் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியா?

553
0
SHARE
Ad

சிகாமாட் : மஇகாவுக்கு இந்தப் பொதுத் தேர்தலில் 10 அல்லது 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சிகாமாட் தொகுதியும் ஒன்று என்பது உறுதியாகியிருக்கிறது. 1982 முதல் ம.இ.கா. தொடர்ச்சியாக போட்டியிட்டு வந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதி ஜோகூரிலுள்ள  சிகாமாட்.

மஇகாவின் தேசியப் பொருளாளர் டான்ஸ்ரீ எம்.இராமசாமி சிகாமாட் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அவர் தற்போது ஆரம்ப கட்ட தேர்தல் பணிகளுக்காக சிகாமாட் சென்றடைந்திருக்கிறார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டியிடுவாரா?

2018 பொதுத் தேர்லில் ம.இ.கா. – தேசிய முன்னணி – வேட்பாளர் (டான்ஸ்ரீ) டாக்டர் ச. சுப்ரமணியத்தை அந்தத் தொகுதியில் தோற்கடித்தார் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ  எட்மண்ட் சந்தாரா (படம்).

#TamilSchoolmychoice

2020ஆம் ஆண்டில் அஸ்மின் அலியுடன் இணைந்து பிகேஆர் கட்சியிலிருந்து  வெளியேறினார் எட்மண்ட் சந்தாரா. ஷெரட்டன் நகர்வு திட்டத்தின் கீழ் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கவிழ்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

பின்னர், பெர்சத்து கட்சியில் அவரும் அஸ்மின் அலியும் இணைந்தனர்.  அண்மையில் எட்மண்ட் சந்தாரா பெர்சத்து கட்சியிலிருந்து விலகி, பிபிஎம் எனப்படும் பார்ட்டி பங்சா மலேசியா என்ற கட்சியில்  சுராய்டா கமாருடின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தார்.

பிபிஎம் கட்சி தேசிய முன்னணியில் இணைவதற்கு  விண்ணப்பம் செய்திருப்பதாகவும் சுராய்டா அறிவித்திருந்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தை தேசிய முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையில் பிபிஎம் கட்சியில் தலைமைத்துவப் போராட்டமும் தொடங்கிவிட்டது. அந்தக் கட்சியில் சுரைடாவுக்கும் லேரி சிங்குக்கும் இடையில் யார் தலைவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகாமாட் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக எட்மண்ட் சந்தாரா அறிவித்திருக்கிறார். அவர் பிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடுவாரா என்பதும் இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

அங்குள்ள வாக்காளர்கள் தான் மீண்டும் போட்டியிட ஆதரவு தருவதால் சிகாமாட் தொகுதியைத் தற்காக்கும் முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பிபிஎம் கட்சி தனித்து நின்று எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எட்மண்ட் சந்தாரா போட்டியிட்டால் நடப்பு நாடாளுமன்ற வேட்பாளர் என்ற முறையிலும், களத்தில் இறங்கி தேர்தல் போட்டியில் நிறைய பணம் செலவழிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்ற முறையிலும் அவர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியிடப் போவது பிகேஆர் கட்சியா? ஜசெகவா?

இதற்கிடையில் சிகாமாட் தொகுதியில் பக்காத்தான் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது பிகேஆர் கட்சியா அல்லது ஜசெகவா என்பது இன்னும் தெரியவில்லை.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் இங்கு போட்டியிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லா 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் போட்டியிடும் என அந்தக் கூட்டணியின் தலைவர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.

15-வது பொதுத் தேர்தலில் பரபரப்பான – கவனிக்கப்படும் – அனல் பறக்கும் – தொகுதிகளில் ஒன்றாக சிகாமாட் உருவாகி வருகிறது.

– இரா.முத்தரசன்