Home நாடு பேராக் மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டாக அமைக்கின்றன

பேராக் மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டாக அமைக்கின்றன

380
0
SHARE
Ad
சாரனி முகமட்

ஈப்போ : அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக் கொண்ட தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகள் இணைந்து பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கின்றன.

நடப்பு மந்திரி பெசார் சாரானி முகமட் மீண்டும் மந்திரி பெசாராக நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

15-வது பொதுத் தேர்தலோடு நடத்தப்பட்ட பேராக் சட்டமன்றத்திற்கான தேர்தலில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹாரப்பான் 24 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேசிய முன்னணி 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த இரண்டு கூட்டணிகளும் இணைந்தால் 33 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் என்பதால் அந்தப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மாநில அரசாங்க ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை 30 சட்டமன்றத் தொகுதிகளாகும்.

பகாங்கிலும் தேசிய முன்னணி – பக்காத்தான் கூட்டணி அரசாங்கம்

இதற்கிடையில் பகாங் மாநில அரசாங்கத்தையும் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் இணைந்து அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.

17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற – 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய முன்னணி – அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த பகாங்கில் முதன் முறையாக தேசிய முன்னணி தோல்வி கண்டிருக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து 42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் அரசாங்கத்தில் எந்தக் கூட்டணியுமே பெரும்பான்மை பெறவில்லை.

தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தேசிய முன்னணியும் பக்காத்தானும் இணைந்தால் 24 சட்டமன்றத் தொகுதிகளை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும். பெரும்பான்மை மாநில அரசாங்கம் அமைக்க 21 சட்டமன்றத் தொகுதிகள் தேவை.