Home நாடு டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

271
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோ ச.விக்னேஸ்வரன்
வழங்கிய
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற பரமபிதா இயேசு பிரானைப் போன்று நாமும் அன்பை மட்டுமே விதைப்போம்.

நமது பாவங்களைப் போக்குவதற்கு பரமபிதாவாக அவதரித்த இயேசு பிரானின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் நன்னாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.

இயேசுவின் பிறந்த நாளாக மட்டுமின்றி – ஒரு புதிய நம்பிக்கையான ஆண்டுக்குள் – அனைவரும் சிறந்து வளர்ந்தோங்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் நுழைய வேண்டும் என்பதற்காகவும் பலவிதமான துதிப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியுடன் – சுவையான உணவுகளை உண்டு களித்து – அன்புடன் வரவேற்றுக் கொண்டாடும் சிறப்பான தினமாகவும் கிறிஸ்துமஸ் தினமானது கொண்டாடப்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்த வகையில் இந்த நன்னாளில், குடும்ப உறுப்பினர்கள் – நண்பர்கள் ஆகியோரை வாழ்த்துவதும் பரிசுகளை வழங்குவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள அன்பானவர்களுக்காக, நம்பிக்கையுடனும் – அன்புடனும் நம்முடைய அன்பானவர்களுக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் கூறுவதும் கிறிஸ்துமஸ் தினத்தின் நன்நோக்கமாகும்.

பல இனங்கள் வாழும் இந்த மலேசிய நாட்டில், அந்தந்த சமயங்களுக்கு உரிய விழாக்களைக் கொண்டாடுவதற்குரிய முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மற்றவர்களின் துன்பங்களில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தினை கருத்திற்கொண்டு, இவ்வாண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே பலவிதமான இயற்கைப் பேரிடர்களையும் நாம் சந்தித்து வருகின்றோம். அவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு நாம் நமது கொண்டாட்டங்களை எளிமையுடன் – சிக்கனமாக – கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னிப்பை மக்களுக்கு வழங்கிய இயேசுவின் பிறந்த தினம் – மக்களின் துன்பம் மறைந்த தினமாக இருக்க வேண்டும். அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற அந்தப் பரம்பிதாவைப் போன்று, நாமும் அன்பை மட்டுமே விதைப்போம் – அன்பின் விதை நிலமாக இதயத்தை வைத்திருப்போம்.

மேலும் சமூகப் பொறுப்பு, நல்லொழுக்கம், உயர்ந்த சிந்தனைகள் ஆகியவற்றோடு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றினையும் நாம் மறவாமல் பேணிக் காப்போம்.

கிறிஸ்துமஸ் நன்னாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.