Home நாடு சபா விவகாரம் : அன்வார் சந்திக்கும் முதல் சவால்

சபா விவகாரம் : அன்வார் சந்திக்கும் முதல் சவால்

669
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : பிரதமரான பின்னர் அடுத்தடுத்து மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார் அன்வார் இப்ராகிம். அவர் எதிர்பாராத புதிய கோணத்திலிருந்து அவருக்கு ஒரு சவால் இப்போது முளைத்துள்ளது.

சபா விவகாரம்தான் அது!

அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளைக் களைய வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தோனிசியாவுக்கான தன் முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் சபா விவகாரத்தைக் கையாளப் போவதாகவும், சம்பந்தப்பட்ட அதன் தலைவர்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தப் போவதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.

சபாவில் நடப்பது என்ன?

புங் மொக்தார் – ஹாஜிஜி நூர்
#TamilSchoolmychoice

ஜிஆர்எஸ் கூட்டணியைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்ளும் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் தற்போது எந்தக் கட்சியிலும் இல்லை என்பதால் அவர் முதலமைச்சராகத் தொடர முடியாது என வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.

சபா மாநில அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ஜிஆர்எஸ் என்ற கூட்டணியே இல்லை என்றும் அப்போது பெர்சாத்து அமைத்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பிலேயே ஹாஜிஜி நூர் முதலமைச்சராகப் பதவியேற்றார் எனவும் ஷாபி  அப்டால் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, கட்சி பிரதிநிதித்துவம் இல்லாத, ஹாஜிஜி நூர் எவ்வாறு முதலமைச்சராகத் தொடர முடியும் என ஷாபி அப்டால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் சபா அம்னோ தலைவர் புங் மொக்தாரும் ஹாஜிஜி நூருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

மாநில அரசாங்கப் பொறுப்புகளில் அம்னோவினரை நியமிக்க ஒப்புக் கொண்ட சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அந்த விவகாரத்தில் நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாலேயே அம்னோ, ஜிஆர்எஸ் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ள நேர்ந்தது என புங் மொக்தார் கூறியுள்ளார்.

சபா மாநில அமைச்சரவையைக் கலைக்கப் போவதாக ஹாஜிஜி நூரும் மிரட்டியிருக்கிறார். மேலும் கசானா சபா அரசு அமைப்பிலிருந்து அம்னோவின் சாலே சைட் கெருவாக்கை நீக்கியுள்ளார். இதன் காரணமாகவே நாங்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என புங் மொக்தார் தெரிவித்திருந்தார்.

தற்போது சபா சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 73 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டவர்கள். கட்சித் தாவல் தடைச் சட்டம் இன்னும் சபா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு எந்த சட்டமன்ற உறுப்பினரும் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் என்னும் நிலைமை இருக்கிறது.

ஜிஆர்எஸ் கூட்டணிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அம்னோ தேசிய முன்னணி வழி 17 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் 7 உறுப்பினர்களையும் வாரிசான் கட்சி 19 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன.

மேலும் சில கட்சிகளின் வழி 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் யார் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும். அம்னோவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் புங் மொக்தாருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். இதனால் அம்னோவிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஜிஆர்எஸ் என்னும் கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி இணைந்த கூட்டணி சபா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது. கடந்த சில நாட்களாக சபாவில் நிலவி வந்த நிச்சயமற்ற அரசியல் நிலைமை காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) தேசிய முன்னணி ஜிஆர்எஸ் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து சபா முதலமைச்சராக ஹாஜிஜி தொடர்ந்து நீடிக்க சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அம்னோ (தேசிய முன்னணி), பக்காத்தான் ஹாரப்பான், வாரிசான் ஆகியவை இணைந்த புதிய அரசாங்கத்திற்கு புங் மொக்தார் முதலமைச்சராகத் தலைமையேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலும் சபா முதலமைச்சராக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனிசியாவிலிருந்து நாடு திரும்பியதும் அன்வார் நடத்தப் போகும் சந்திப்புகளின் மூலம் சபா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படலாம்.