Home நாடு “ஹாஜிஜி நூர் நம்பிக்கைத் துரோகம் – அதனால் ஆதரவை மீட்டுக் கொண்டோம்” – புங் மொக்தார்

“ஹாஜிஜி நூர் நம்பிக்கைத் துரோகம் – அதனால் ஆதரவை மீட்டுக் கொண்டோம்” – புங் மொக்தார்

458
0
SHARE
Ad
புங் மொக்தார் – ஹாஜிஜி நூர்

கோத்தா கினபாலு : மாநில அரசாங்கப் பொறுப்புகளில் அம்னோவினரை நியமிக்க ஒப்புக் கொண்ட சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அந்த விவகாரத்தில் நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாலேயே அம்னோ ஜிஆர்எஸ் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ள நேர்ந்தது என புங் மொக்தார் கூறியுள்ளார்.

சபா மாநில அமைச்சரவையைக் கலைக்கப் போவதாக ஹாஜிஜி நூர் மிரட்டியிருக்கிறார். மேலும் கசானா சபா அரசு அமைப்பிலிருந்து அம்னோவின் சாலே சைட் கெருவாக்கை நீக்கியுள்ளார். இதன் காரணமாகவே நாங்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என புங் மொக்தார் தெரிவித்தார்.

தற்போது சபா சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 73 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டவர்கள். கட்சித் தாவல் தடைச் சட்டம் இன்னும் சபா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு எந்த சட்டமன்ற உறுப்பினரும் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் என்னும் நிலைமை இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜிஆர்எஸ் கூட்டணிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அம்னோ தேசிய முன்னணி வழி 17 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் 7 உறுப்பினர்களையும் வாரிசான் கட்சி 19 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன.

மேலும் சில கட்சிகளின் வழி 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் யார் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

ஜிஆர்எஸ் என்னும் கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி இணைந்த கூட்டணி சபா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது. கடந்த சில நாட்களாக சபாவில் நிலவி வந்த நிச்சயமற்ற அரசியல் நிலைமை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை தேசிய முன்னணி ஜிஆர்எஸ் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து சபா முதலமைச்சராக ஹாஜிஜி தொடர்ந்து நீடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அம்னோ (தேசிய முன்னணி), பக்காத்தான் ஹாரப்பான், வாரிசான் ஆகியவை இணைந்த புதிய அரசாங்கத்திற்கு புங் மொக்தார் முதலமைச்சராகத் தலைமையேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலும் சபா முதலமைச்சராக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.