Home நாடு “ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண்போம்” – விக்னேஸ்வரன்...

“ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண்போம்” – விக்னேஸ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

343
0
SHARE
Ad

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர்
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
வழங்கிய வாழ்த்துச் செய்தி

டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண முயற்சி செய்வோம்

இன்று பிறக்கும் சோபகிருது சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறக்கின்ற புத்தாண்டு நமது இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

முற்றிலும் மாறிவிட்ட, புதிய அரசியல் சூழ்நிலையை இந்திய சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கிறது. அரசாங்கங்கள் மாறினாலும் நமது சவால்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 77 ஆண்டுகளாக தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் மஇகாவுக்கும் இது ஒரு சவாலான காலகட்டம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

#TamilSchoolmychoice

அதை உணர்ந்துதான் இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடவும், நம்முடைய பிரச்சனைகளுக்கு நாமே சுயமாக தீர்வு காணவும் முடிவு செய்து அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம். கல்விதான் நம் சமூகத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நன்குணர்ந்ததால் எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் ஆகிய அமைப்புகளின் மூலமும் டேஃப் கல்லூரி மூலமும் நாம் இந்திய சமூகத்தின் கல்வித் தேவைகளை இயன்ற வரையில் பூர்த்தி செய்து வருகிறோம்.

இதுவரையில் 180 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை கல்வி நிதியாக நாம் வழங்கியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை, மருத்துவர்களை, பல்மருத்துவர்களை, மருந்தியல் பட்டதாரிகளை இன்று நம் சமுதாயம் கொண்டிருப்பதற்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம்தான் முக்கியப் பங்கை ஆற்றியிருக்கிறது.

அண்மையில் கூட, சிறப்பான தேர்ச்சிகள் பெற்றிருந்தும் பொதுப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட 26 இந்திய மாணவர்களுக்கு நாமே உபகாரச் சம்பளம் வழங்கி ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில வாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்.

ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியிருக்கும் நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சுறுசுறுப்புடன், தீவிரமாகவும் நமது நாட்டின் தலையாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பெரிதும் பாடுபட்டு வருகிறார். அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க மஇகா சார்பில் நாங்கள் உறுதியளித்துள்ளோம். அதே வேளையில் அவரும் மஇகா முன்வைந்த இந்திய சமூகப் பிரச்சனைகளைக் கனிவோடும், அக்கறையோடும் கவனிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த நம்பிக்கையுடனும் நமக்கான பிரச்சனைகளுக்கு நாமே இயன்ற அளவில் தீர்வு காண முயற்சி செய்வோம் என்ற நோக்கத்துடனும் இந்த சித்திரைப் புத்தாண்டை உற்சாகத்தோடும், நன்மைகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடனும் கொண்டாடி மகிழ்வோம்.

அன்பு வாழ்த்துகளுடன்,

தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்