Home உலகம் சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் கைது

சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் கைது

831
0
SHARE
Ad
ஈஸ்வரன்

சிங்கப்பூர் : போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கைது செய்யப்பட்டு பிணையில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட்டார் என்றும் அவரது அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (சிபிஐபி-CPIB) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹோட்டல் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஓங் பெங் செங் கைது செய்யப்பட்ட அதே நாளில் ஈஸ்வரனும் கைது செய்யப்பட்டார் என அந்த புலனாய்வு இலாகா குறிப்பிட்டது.

ஓங்கும் பிணையில் விடுவிக்கப்பட்டார். CPIB புலனாய்வு மூலம் கண்டு பிடித்த ஒரு வழக்கின் விசாரணைக்கு ஈஸ்வரன் உதவுகிறார் என்றும் அந்த இலாகா கூறியது.

#TamilSchoolmychoice

அதே நாளில், பிரதமர் லீ சியென் லூங், விசாரணை முடியும் வரை ஓய்வு எடுக்குமாறு ஈஸ்வரனுக்கு அறிவுறுத்தியதாகக் கூறினார்.

ஈஸ்வரன் தனது விடுமுறையின் போது சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என்றும், அவருக்கு அதிகாரபூர்வ ஆவணங்கள் எதுவும் கிடைக்காது –  அரசாங்க கட்டிடங்களுக்கும் அவர் செல்ல முடியாது என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் மீது ஊழல் நடவடிக்கைகளை விசாரிக்கும் இலாகா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

61 வயதான ஈஸ்வரன் மீதான விசாரணை தொடர்பில் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஓங் பெங் செங் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 100 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் முன் ஜாமீன் செலுத்தியுள்ளார். ஈஸ்வரனுடனான தொடர்புகள் குறித்து விளக்கமளிக்க 77 வயதான ஓங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்வரன் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஓங் பிரபல கார் பந்தயமான போர்முலா 1 போட்டிகளை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியவராவார். இரவு நேர போர்முலா 1 போட்டிகளை நடத்துவதற்காக ஏற்படும் 135 மில்லியன் டாலர் செலவுகளில் சிங்கப்பூர் ஜிபி நிறுவனம் 40 விழுக்காட்டை வழங்குகிறது. ஓங் இந்நிறுவனத்தின் தலைவராவார். எஞ்சிய 60 விழுக்காட்டு நிதியை சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் துறை அமைச்சு வழங்குகிறது.