Home நாடு கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேறுமா?

கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேறுமா?

310
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் மீண்டும் ஓர் அரசியல் முச்சந்தியில் வந்து நிற்கிறது கெராக்கான். 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருந்து கெராக்கான் வீராவேசமாக வெளியேறியது.

அப்படியே இருந்திருந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் மசீச, மஇகா போன்று, ஷெராட்டன் நகர்வைத் தொடர்ந்து அமைந்த மாற்று அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சர் பதவிகளைப் கெராக்கான் கட்சியினர் பெற்றிருக்கலாம்.

பெரிக்காத்தான் நேஷனலில் கெராக்கான் இணைந்ததன் மூலம் அது புதிய அரசியல் பலம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இணைந்தது முதல் பாஸ் கட்சியோடு கூட்டணியில் இணைந்திருப்பது குறித்து கெராக்கானின் பெரும்பான்மை சீன உறுப்பினர்கள் அதிருப்திகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

நடைபெற்ற 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கெராக்கானுக்கு 36 தொகுதிகள் 4 மாநிலங்களில் (கிளந்தான், திரெங்கானு தவிர்த்து) ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் கெராக்கான் வெற்றி பெற்றது. அதுதான் கூலிம் சட்டமன்றத் தொகுதி.

மற்ற தொகுதிகளில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் பெரிக்காத்தான் கூட்டணிக்குத் தேவைப்பட்ட சீன வாக்குகளை கெராக்கான் பெற்றுத் தர முடியவில்லை.

கெராக்கான் போட்டியிட்ட தொகுதிகளில் தேவைப்பட்ட மலாய் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனலின் பெர்சாத்து, பாஸ் கட்சிகள் கெராக்கானுக்குப் பெற்றுத் தர முடியவில்லை.

கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் பெரும்பான்மை மலாய் வாக்காளர்களைக் கொண்ட பாயான் லெப்பாஸ் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு பாஸ் ஆதரவாளர்களாலேயே நிராகரிக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அஸ்ருல் மகாதீர் 1,889 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

எனவே, இந்தத் தோல்விகளால் கெராக்கானுக்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் தொடர்ந்து மதிப்போ, மரியாதையோ இருக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக தனித்து கட்சியாக இயங்கிக் கொள்ளலாம் என்ற அதிரடி முடிவை கெராக்கான் மத்திய செயலவை எடுக்கக் கூடும்.

– இரா.முத்தரசன்