Home நாடு சிலாங்கூர் : பாப்பாராய்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் – அமிருடின் மீண்டும் மந்திரி பெசார்

சிலாங்கூர் : பாப்பாராய்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் – அமிருடின் மீண்டும் மந்திரி பெசார்

272
0
SHARE
Ad

கிள்ளான்: சிலாங்கூர் மாநில அரசின் 10 புதிய ஆட்சிக் குழு  உறுப்பினர்களும் மந்திரி பெசாரும் இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) பதவியேற்றனர்.

இன்று காலையில் மந்திரி பெசார் டத்தோ அமிருடின் ஷாரி இரண்டாவது தவணைக்கு மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.

பிற்பகல் 2 மணிக்கு இஸ்தானா ஆலம் ஷாவில் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா முன்னிலையில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஏழு பேர் புதிய முகங்கள், மூன்று பேர் ஏற்கனவே அந்தப் பதவியை வகித்தவர்கள்.

ஜசெக சார்பில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், பிகேஆரில் இருந்து மூன்று பேரும், அமானாவில் இருந்து இருவர் மற்றும் அம்னோவிலிருந்து ஒருவர் என ஒற்றுமை அரசாங்க பாணியில் சிலாங்கூர் மாநிலத்திலும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா, கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி இங்கா ஆகியோர் பிகேஆர் சார்பில் நியமனம் பெற்றனர்.

போர்ஹான் மற்றும் நஜ்வான் ஆகியோர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். டாக்டர் ஃபாஹ்மி முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஐந்து முறை செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகர் இங் சுயீ லிம், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்சீ ஹான், பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் மற்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வி.பாப்பாராய்டு ஆகியோர் ஜசெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஆவர்.

பாப்பாராய்டு வீரமன்

கடந்த இரண்டு தவணைகளாக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த கணபதி ராவுக்கு பதிலாக அவரின் இளைய சகோதரர் பாப்பாராய்டு ஆட்சிக் குழு உறுப்பினராகியுள்ளார்.

சிலாங்கூர் அமானா தலைவரும் பாண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினருமான இசாம் ஹாஷிம், அமானா கட்சியின் முதல்-முறை சட்டமன்ற உறுப்பினர் – தாமான் டெம்ப்ளர் தொகுதியின் – அன்ஃபால் சாரி ஆகிய இருவரும் அமானா சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அன்ஃபால் மூன்று முறை உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாரி சுங்கிப்பின் மகள் ஆவார்.

தேசிய முன்னணிக்கு (பாரிசான் நேஷனல்) ஒதுக்கப்பட்ட ஒரே ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் ஏற்றுக் கொண்டார்.