Home இந்தியா நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வெள்ள நிலைமை குறித்து நேரடி ஆய்வு

நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வெள்ள நிலைமை குறித்து நேரடி ஆய்வு

227
0
SHARE
Ad

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) நேரடியாக ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஸ்டாலின் தங்கையும், திமுகவின் முக்கியப் புள்ளிகளின் ஒருவருமான கனிமொழியின் நாடாளுமன்றத் தொகுதியாகும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ள சம்பவங்கள் நிகழ்ந்தால் அனைத்து அதிகாரிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிலைமை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ள மீட்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

#TamilSchoolmychoice

இக்கூட்டத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் திரு. எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி, தமிழக நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசு முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பி. சசிகலா, சட்டமன்ற உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, நீர் நிலைகளில் உடைப்புகள் அல்லது கொள்ளளவை மீறி நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களில் ஒரு வலுவான முன் எச்சரிக்கை அமைப்பு முறையை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார். தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கண்டறிந்து இத்தகைய அபாயங்கள் குறித்து எச்சரிப்பதில் இந்த அமைப்பு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளில் சொத்துக்களுக்கு ஏற்படக் கூடிய சேதம் மற்றும் உயிர் இழப்பு ஆகியவற்றைத் தடுக்கவோ அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கவோ முடியும் என்று அமைச்சர் கூறினார். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடியில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தக்க தருணத்தில் வழங்க அறுவடைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நிதியமைச்சர் அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சுமார் 120 கி.மீ தொலைவிற்கு பயணித்து மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.