Home நாடு ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

139
0
SHARE
Ad
ராபர்ட் டான்

கோலாலம்பூர் : அரசாங்கத்திடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான குத்தகையைப் பெறுவதற்காக அரசாங்கத் தரப்புகளை ஏமாற்றியதற்காக ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 3) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. அவரின் அனைத்துலகக் கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு ஒருமுறை அவர் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வந்து நேரடியாகத் தன்னைப் பதிந்து கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

அரசாங்க வாகனங்களை பராமரிக்கும் 15 ஆண்டுகளுக்கான உரிமம் அவரின் ஸ்பான்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.

83 வயதான ராபர்ட் டான் குற்றவியல் பிரிவு 420-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

ஸ்பான்கோ நிறுவனம் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குகளைக் கொண்டிருக்கிறது என்ற தவறான தகவலையும் ராபர்ட் டான் இந்தக் குத்தகையைப் பெற சமர்ப்பித்தார் என்றும் அவர் மீதான குற்றப் பத்திரிக்கை விவரித்தது.

குற்றாச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ராபர்ட் டானுக்கு குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறை, பிரம்படி, அபராதம் ஆகிய தண்டனைகளும் விதிக்கப்படலாம். ராபர்ட் டான் வயது காரணமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும் பிரம்படி அவருக்கு வழங்கப்படாது.

வழக்கு அடுத்து ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.