Home நாடு மலேசியாவின் 50 பணக்காரர்களில் இருவர் தமிழர்கள்! ஆனந்த கிருஷ்ணன் – ரூபன் ஞானலிங்கம் குடும்பத்தினர்!

மலேசியாவின் 50 பணக்காரர்களில் இருவர் தமிழர்கள்! ஆனந்த கிருஷ்ணன் – ரூபன் ஞானலிங்கம் குடும்பத்தினர்!

309
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் முதல் 50 மிகப் பெரிய பணக்காரர்களைப் பட்டியலிட்டுள்ள, உலகின் முன்னணி நிதி ஊடகமான ஃபோர்ப்ஸ், அந்தப் பட்டியலில் இரண்டு இந்தியர்களை – தமிழர்களை குறிப்பிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவின் முதல் சில பெரும்பணக்காரர்களில் ஒருவராக அந்தப் பட்டியலில் இடம் பெற்று வரும் டி.ஆனந்தகிருஷ்ணன் இந்த முறை 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் வணிகத் துறையில் பட்டம் பெற்றவர் ஆனந்தகிருஷ்ணன். எண்ணெய் விநியோக வணிகத்தில் தொடக்கத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியவர். மலேசியாவின் மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, எண்ணெய் சேவைகள் நிறுவனமான பூமி அர்மாடா ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்.

#TamilSchoolmychoice

அவரின் வணிக முயற்சிகளில் ஏர்செல் என்னும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் அவர் மேற்கொண்ட ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் முதலீடு தோல்வியில் முடிந்தது.

குதிரைப் பந்தயத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆனந்தகிருஷ்ணன். ஆஸ்திரேலியாவில் அவர் நடத்தி வரும் குதிரைகளுக்கான வளர்ப்புப் பண்ணையும், சிறந்த பொலிக் குதிரைகளை உருவாக்கும் பண்ணைகளும் ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரிய பண்ணைகளாக மதிப்பிடப்படுகின்றன.

ஆனந்தகிருஷ்ணனின் சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது.

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 12-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரூபன் ஞானலிங்கம். மறைந்த இவரின் தந்தையார் டான்ஸ்ரீ ஞானலிங்கம் வெஸ்ட்போர்ட் துறைமுக நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குடமையின் அடிப்படையில் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 1.6 அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது.

முதலாவது மிகப் பெரிய பணக்காரர் ரோபர்ட் குவோக்

அதில் மலேசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரோபர்ட் குவோக் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக இந்த முதல் நிலையை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 11.5 அமெரிக்க டாலராக (55 பில்லியன் மலேசிய ரிங்கிட்) மதிப்பிடப்பட்டுள்ளது.

குவோக் குரூப் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ரோபர்ட் குவோக். அந்த நிறுவனம் தங்கும் விடுதிகள், நில, கட்டட சொத்துகள் மூலப் பொருட்கள் ஆகியவை தொடர்பான நிறுவனங்களில் பங்குடமைகளைக் கொண்டிருக்கிறது.

1971-இல் சிங்கப்பூரில் அவரால் தொடங்கப்பட்ட ஷங்ரிலா தங்கும் விடுதிகள் உலகமெங்கும் பரவி அனைத்துலக தரத்திலான தங்கும் விடுதிகளாகத் திகழ்கின்றன.

ரோபர்ட் குவோக்கின் நெருங்கிய உறவினரான குவோக் கூன் என்பவர் வில்மார் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனத்தை நடத்துகிறார். அதிலும் கணிசமான பங்குடமையை ரோபர்ட் குவோக் கொண்டிருக்கிறார்.

ரோபர்ட் குவோக் ஆக இளைய மகன் குவோக் கூன் ஹூவா ஹாங்காங்கில் உள்ள கேரி புரோபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார்.

பெரும்பாலும் ஹாங்காங்கில் தங்கியிருந்தாலும் ரோபர்ட் குவோக் மலேசியராவார். கடந்த ஆண்டு (2023) அக்டோபரில் அவர் தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். 8 பிள்ளைகளைக் கொண்ட அவர் சிங்கப்பூரின் ராபிள்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.

1949-ஆம் ஆண்டில் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் அவர் ஈடுபடத் தொடங்கினார்.

இதற்கிடையில் முதல் 50 மலேசியப் பணக்காரர்களின் மொத்த சொத்துடமையை 83.4 பில்லியன் அமெரிக்க டாலராக (399.5 பில்லியன் ரிங்கிட்) ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 2 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலராக (376.2 பில்லியன் ரிங்கிட்) இருந்தது.

மலேசியாவின் ரிங்கிட் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வரும் நிலையிலும் மலேசியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குவோக்கிற்கு அடுத்த நிலையில் 2-வது பெரிய பணக்காரராக குவெக் லெங் சான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். மலேசியாவின் பிரபல வங்கியான ஹோங் லியோங் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான அவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர் (42.1 பில்லியன் ரிங்கிட்) சொத்துடமையைக் கொண்டுள்ளார்.