Home நாடு “பாஸ் கட்சி கூட்டணி என்பதால் இந்தியர்கள் பெர்சாத்துவுக்கு வாக்களிப்பார்கள்” – ஆன்மீகத் தலைவர் கூறுகிறார்

“பாஸ் கட்சி கூட்டணி என்பதால் இந்தியர்கள் பெர்சாத்துவுக்கு வாக்களிப்பார்கள்” – ஆன்மீகத் தலைவர் கூறுகிறார்

159
0
SHARE
Ad

கோலகுபுபாரு : நாளை சனிக்கிழமை (மே 11) நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பாஸ் கட்சி இணைந்திருக்கும் பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ள பெர்சாத்து கட்சிக்கு வாக்களிக்கத் தயங்க மாட்டார்கள் என பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் மாறினாலும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறும் இந்திய சமூகத்தினர் மெல்ல மெல்ல இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

எனவேதான், பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் கைருல் அசாரி சாவுட்டிற்கு இந்தியர்கள் வாக்களிப்பார்கள் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஹாஷிம் ஜாசின் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் மீது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நம்பிக்கை வைப்பது புதியதல்ல எனக் குறிப்பிட்ட அவர், பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாத பிரிவில் அதிகமான இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் சமீப காலத்தில் அவர்களின் ஆதரவு அதிகரித்து வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லீம் அல்லாத பிரிவினருக்கு தாங்கள் செனட்டர் பதவியை வழங்கியிருப்பதையும் ஹாஷிம் ஜாசின் சுட்டிக் காட்டினார்.

எந்த இனத்தையும் தாங்கள் புறக்கணிக்கப்போவதில்லை, ஒதுக்கப்போவதில்லை என்பதை முஸ்லீம் அல்லாதவர்கள் எங்களின் கடந்த கால வரலாற்றைப் பார்த்து நம்புகிறார்கள். உதாரணமாக, கிளந்தானில் சீன, சயாமிய சமூகத்தினர் பாஸ் கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் ஹாஷிம் ஜாசின் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் புனிதன் தலைமையிலான மலேசிய இந்திய மக்கள் கட்சி கடந்த மாதத்தில் இணைந்துள்ளது. அவர்களும் பெரிக்காத்தான் கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.