Home நாடு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்காக 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு – அன்வார் அறிவிப்பு

மாணவர்களுக்கு, புத்தகங்களுக்காக 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு – அன்வார் அறிவிப்பு

275
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேலே உள்ள மாணவர்களுக்கும், இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி மட்டுமே அல்லாமல் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் நாளை முதல் RM100 மதிப்பிலான புத்தகப் பற்றுச் சீட்டுகள் (கூப்பன்கள்) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியில், புத்தகங்களை வாங்குவதற்கான வழிகாட்டுதல்களுடன் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

“முந்தைய காலங்களில், புத்தகக் கூப்பன்கள் மதிப்பற்ற மற்றும் சின்னஞ்சிறு புத்தகங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. எனவே, புத்தகக் கூப்பன்களின் பாதியாவது ஏ.சமத் சயீத், ஷானொன் அஹ்மத், மற்றும் அன்வார் ரித்வான் போன்ற தேசியக் கவிஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என முன்மொழிகிறேன்” என அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அல்லது, நம் நாட்டின் முன்னேற்றம் கருதி இலக்கவியல் (டிஜிட்டல்) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புத்தகங்களை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்படலாம். மற்ற பாதித் தொகையை, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத் தேர்வு செய்ய சலுகை அளிப்போம்.”

தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி (Kuala Lumpur International Book Fair-KLIBF) 2024-இன் துவக்க விழாவில் அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், உயர் கல்வி அமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மேலும், ஃபட்லினா மற்றும் சாம்ரி ஆகியோரிடம், புத்தகக் கூப்பன்களை விரைவாகப் பகிர்ந்தளிப்பதற்கான சிறந்த நடைமுறையை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் மாணவர்கள் 31 மே 2024 முதல் பிற்பகல் 2 மணிக்கே நடந்து கொண்டிருக்கும் KLIBF புத்தகக் கண்காட்சியில் இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்த முடியும்.

KLIBF மே 24 முதல் ஜூன் 2 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

குறுகிய கால அறிவிப்பாக இருந்தபோதிலும், புத்தகக் கூப்பன்களை பகிர்ந்தளிக்க ஃபட்லினாவுடன் இணைந்து சிறந்த நடைமுறையைக் காண்பேன் என்று சாம்ரி கூறினார்.

“இந்த அறிவிப்பு, குறிப்பாக இளைய தலைமுறைக்கு, மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இதை நாங்கள் செய்து முடிப்போம், ஏனெனில் இது இரண்டு விஷயங்களை நிரூபிக்கிறது. முதலில், பிரதமர் அறிவுக் கலாசாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார், இரண்டாவதாக, நெருக்கடியான நிதிநிலை மற்றும் பொருளாதார சவால்களில் கூட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று அவர் கூறினார்.