Home நாடு “இந்திய சமூகக் கூட்டுறவு மாநாடு நமது பெருமைக்குரிய அடையாளமாக மாறும்” – ரமணன் நம்பிக்கை

“இந்திய சமூகக் கூட்டுறவு மாநாடு நமது பெருமைக்குரிய அடையாளமாக மாறும்” – ரமணன் நம்பிக்கை

76
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 100 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது மலேசியக் கூட்டுறவு இயக்கம். பல இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்தியர்களின் பொருளாதாரப் பங்குடமையில் கணிசமான பங்கு நமது இந்திய கூட்டுறவு சங்கங்களின் வசம்தான் இருந்து வருகிறது.

இந்தியக் கூட்டுறவுக் கழகங்களின் மாநாடு ஒன்றை நடத்த தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை அமைச்சு முன்வந்திருக்கிறது. துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் முன்னெடுப்பில் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 13-ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்திலுள்ள பேங்க் ராயாட் கட்டடத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டுக்கான முத்திரை சின்னத்தை (லோகோ) நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரமணன் வெளியிட்டார்.

டத்தோஸ்ரீ ஆர்.ரமணன்

நடைபெறவிருக்கும் இந்தியக் கூட்டுறவு மாநாடு, இந்திய சமூக கூட்டுறவின் பெருமைக்குரிய அடையாளமாகவும், பிரதமர் தலைமையிலான மதானி  அரசாங்கத்துடன் இணைந்து மதானி பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் உத்வேகமாகவும் இருக்கும் என ரமணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

Persidangan Koperasi Komuniti India (PKKI), என்ற இந்த மாநாடு, நாட்டில் கூட்டுறவு இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்த மாநாடு இந்த நாட்டில் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இந்திய சமூக கூட்டுறவுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

“இந்த மாநாட்டின் மூலம் இந்திய சமூக கூட்டுறவுகளால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்க நான் விரும்புகிறேன். மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) போன்ற அமைப்புகள் மூலம் தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை அமைச்சு எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க இயன்றவரை உதவும்” எனவும் ரமணன் மேலும் தெரிவித்தார்.

“419 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட அனைத்து இந்திய சமூக கூட்டுறவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை மேம்படும் என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கடும் வறுமையை ஒழிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்திய சமூகத்தின் வறுமையும் குறையும் என்றும் நான் நம்புகிறேன்” எனவும் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ரமணன் வலியுறுத்தினார்.