புதுடில்லி :இலண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி உலகத் தமிழர்களின் அபிமானத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவைச் சந்தித்துத் தனது பாராட்டுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (மார்ச் 18) இளையராஜாவைச் சந்தித்தது குறித்து தனது சமூக ஊடகங்களில் பதிவிட்ட மோடி, “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
“எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது – உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது” என்றும் மோடி குறிப்பிட்டார்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்திய பின்னர் நாடு திரும்பிய இளையராஜாவுக்கு திமுக அரசாங்கம் சிறப்பான வரவேற்பை நல்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.