Home அரசியல் கேலாங் பாத்தாவில் தே.மு. ஆதரவாக பிரச்சாரம் செய்த வேதமூர்த்திக்கு எதிர்ப்பு!

கேலாங் பாத்தாவில் தே.மு. ஆதரவாக பிரச்சாரம் செய்த வேதமூர்த்திக்கு எதிர்ப்பு!

440
0
SHARE
Ad

waythaஜோகூர் பாரு, மே 4- கேலாங் பாத்தாவில் நேற்று முன் தினம் இரவு ஹிண்ட்ராஃப் தலைவர் பொ. வேதமூர்த்தி தேசிய முன்னணிக்கு ஆதரவாக நடத்திய பிரச்சாரத்தில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.

தேசிய முன்னணிக்கு ஆதரவாக வேத மூர்த்தி நடத்திய பிரச்சாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க முயன்றனர்.

ஆனால், போலீசார் தலையிட்டு அவர்களை தடுத்தனர். ஒருமணி நேரம் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ஸ்கூடாய், தாமான் நேசாவில் ஒரு பிரச்சாரத்தில் சுமார் 300 குடியிருப்பாளர்களிடம் பேசிய வேதமூர்த்தி, வேட்புமனு தினத்துக்கு இரண்டு நாள் முன்னதாக ஏப்ரல் 20ஆம் தேதி, தேமு தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் ஹிண்ட்ராப் செயல் திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டதை விளக்கி அதன் காரணமாக இந்தியர்கள் இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அப்போது சுமார் 10 இந்தியர்கள், பிகேஆர் உறுப்பினர் கே.செல்வகுமாரன் தலைமையில் வேதமூர்த்தியை நோக்கிச் சென்றனர்.

ஆனால், அந்நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த போலிசார் விரைந்து செயல்பட்டு அக்குழுவினரை பிரச்சாரம் நடந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

“நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவர் யார் இந்தியர்களை பிரதிநிதிக்க? ஹிண்ட்ராப்புக்குத் தலைமையேற்கும் அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்?” என்று செல்வகுமாரன் உரத்த குரலில் கேட்க, மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் வேதமூர்த்தியை நோக்கி கூச்சலிட்டனர்.

இதற்கடுத்து, அங்கிருந்த ஆரஞ்சு வண்ணத்தில் சட்டை அணிந்திருந்த வேதமூர்த்தியின் ஆதரவாளர்கள், “ஹிண்ட்ராப் வாழ்க! ஹிண்ட்ராப் வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.

சுமார் 30 போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தள்ளிக்கொண்டே சென்று பிரச்சாரம் நடந்த இடத்திலிருந்து ஏறக்குறைய 100 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தினார்கள்.

அங்கிருந்தவாறே, அவர்கள் “மாற்றம்!!! முட்டாள்!!! மாற்றம் முட்டாள்” என்று சத்தமிட்டனர்.

வேதமூர்த்தி இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தமது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

பணம் பெற்றுக்கொண்ட வேதமூர்த்தி தே.மு- வை ஆதரிக்கட்டும் –  செல்வகுமார்

வேதமூர்த்தியை திட்டியபடி வந்த எதிர்ப்புக் குழுவினர், தேசியமுன்னணியை ஆதரித்து, இந்திய சமூகத்தினருக்கு துரோகம் செய்த அவர்,  5 தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டபோது வெளிநாட்டு வாசம் செய்துவிட்டு, இப்போது நஜிப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு, தேசிய முன்னணியை ஆதரிக்கிறார். அவர் வேண்டுமானால் ஆதரிக்கட்டும். மக்களை ஆதரிக்கச் சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்றனர்.

மேலும் சிறை சென்ற  மற்ற 4 தலைவர்களும் இப்போது மக்கள் கூட்டணி பக்கம் இருக்கிறார்கள் என்று செல்வகுமார் கினி தொலைக்காட்சி தளத்திடம் கூறினார்.

பரப்புரை முடிந்து  காருக்கு வந்த வேதமூர்த்தி அதே குழுவினரால் மீண்டும் மடக்கப்பட்டார். காவலர்கள் பலமுறை கேட்டுக்கொண்டும் தங்களை வேதமூர்த்தி நேருக்கு நேர் சந்தித்துப் பேசவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.  இரு குழுவினரையும் காவலர்கள் சமாதானம் செய்யவே முயன்றனர்.

வேதமூர்த்தி அத்தொகுதி வேட்பாளர் தே.மு. தலைவர் அப்துல் கனிக்கு வாக்களித்து லிம் கிட் சியாங்-கை புறக்கணிக்கச் சொன்னார். இந்நிகழ்வில் தன் பெயர் இருந்தும் கனி வரவில்லை. தாங்களே உண்மையான ஹிண்ட்ராப் என்றும் தங்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுவதாக வேதமூர்த்தி சொன்னபோது,’ நம்பிக்கை துரோகியே’ என்று அவரைப் பார்த்து எதிர்தரப்பினர் சத்தமிட்டனர்.