Home உலகம் சட்டவிரோத பேரணியில் பங்கேற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூர் காவல் துறை நடவடிக்கை

சட்டவிரோத பேரணியில் பங்கேற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூர் காவல் துறை நடவடிக்கை

546
0
SHARE
Ad

S'pore-Merlion-parkசிங்கப்பூர், மே 12 – அண்மையில் சிங்கப்பூரிலுள்ள மெர்லியோன் பூங்காவில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு பெற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூரின் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

சட்டவிரோதப் பேரணியில் தீவிரமாக பங்கேற்றதன்” காரணமாக அவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மலேசியர்களின் வேலை மற்றும் குடிநுழைவுத் துறை அனுமதி குறித்தும் சிங்கப்பூர் அரசாங்கம் மறு பரிசீலனை செய்து வருவதாகவும், அவர்களின் முதலாளிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பத்திரிக்கையான ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தியொன்றில் கூறியது.

அந்த 9 பேரும் சம்பந்தப்பட்ட எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றியதாக நம்பப்படுகின்றது. அந்த பேரணி சிங்கப்பூர் காவல் துறையின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டதால் சிங்கப்பூர் சட்டவிதிகளின்படி அது சட்டவிரோத பேரணியாகும்.

கடந்த புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் சிங்கப்பூரின் முக்கிய மையமான மெரினா பேஎன்ற இடத்தில் சுமார் 100 பேர், கறுப்பு நிற ஆடை அணிந்து, மலேசியாவில் நடந்த 13வது பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் மலேசியர்களாவர்.

அதே நாளில்தான் மலேசியாவின் கிளானா ஜெயா அரங்கிலும் அன்வார் இப்ராகிம் தலைமையில் தேர்தல் முறைகேடுகள் குறித்த எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது என்பதும் அதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியா தலையிடாது

மலேசிய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் பாக்ரி சினின் இது குறித்து கருத்துரைக்கும்போது, சிங்கப்பூர் காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்த புலனாய்வுகளை மேற்கொள்வர் என்றும் அதில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும், மலேசியர்கள் சிங்கப்பூரில் அந்த நாட்டின் சட்டங்களை மீறினால் அவர்கள் அதற்குரிய பலன்களை எதிர்நோக்கத்தான் வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில் மலேசியப் பொதுத் தேர்தல் முறைகேடுகளுக்காக சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் நடத்திய 21 மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த மலேசியர்கள் சிங்கப்பூரின் மெர்லியோன் பூங்காவில், எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டதாகவும், அத்தகைய சட்டவிரோதப் போராட்டங்கள் நடத்தக்கூடாது என சிங்கப்பூர் காவல் துறை பன்முறை தொடர்ந்து விடுத்த  ஆலோசனைகளை மீறியதால் அவர்கள்கைதுசெய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் காவல் துறையினர் விடுத்த அறிக்கையொன்றில் கூறியுள்ளனர்.