சோவேடோ, ஜூன் 10- தென்னாப்பிரிக்க நாட்டின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நெல்சன் மண்டேலா ஆவார்.
94 வயதான நெல்சன் மண்டேலா கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நோய் காரணமாக தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்.
தற்போது, சனிக்கிழமை அன்று நுரையீரல் தொற்று காரணமாக நான்காவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்ற முறை அனுமதிக்கப்பட்டபோது, அவர் நலமுடன் உற்சாகமாக இருப்பதாக அறிவித்த அரசு, நேற்று அவரின் உடல்நிலை கவலைக்கிடமாய் உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் கவலையுற்ற நூற்றுக்கணக்கான மக்கள், இன்று ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள சோவேடோ நகரில் உள்ள ரெஜினா முண்டி கத்தோலிக்க தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தென்னாப்பிரிக்க மக்களுக்கு நன்மை செய்த அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக அங்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்தவர்கள் கூறினார். இன்று அவரது உடல்நிலை பற்றி அரசு ஏதும் அறிக்கை வெளியிடவில்லை.