Home நாடு “குற்றச்செயல்களை ஒழிக்க எல்லா குண்டர்களையும் சுட்டுத்தள்ளுவோமா?”- வேதமூர்த்தி கேள்வி

“குற்றச்செயல்களை ஒழிக்க எல்லா குண்டர்களையும் சுட்டுத்தள்ளுவோமா?”- வேதமூர்த்தி கேள்வி

462
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – இந்திய மலேசிய மக்களிடையே பெருகி இருக்கும் குண்டர் கும்பல் பிரச்சனையை வன்முறை கொண்டு அடக்கிவிட முடியாது என்று ஹிண்டராப் தலைவரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் நிறைய குண்டர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அது தான் நமக்கு தொல்லை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அதிக எண்ணிக்கை. அதற்காக அவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளி வீதிகளை சுத்தமாக்குங்கள் என்று யாராவது பரிந்துரை செய்கிறார்களா?” என்று வேதமூர்த்தி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பினாங்கில் 5 இந்தியர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து தான் விடுத்த அறிக்கைக்கு எழுந்த கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு வேதமூர்த்தி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “சுட்டுக்கொல்வது தான் குற்றச்செயல்களுக்கு சரியான தீர்வா?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்திய இளைஞர்கள் அதான் அதிக அளவில் குண்டர் கும்பலில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துக்கூறிய வேதமூர்த்தி,

“சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் இறுதிச் சடங்கில் 04 கும்பலைச் சேர்ந்த சுமார் 800 இந்திய இளைஞர்கள் கலந்து கொண்டதாக நாளிதழ்கள் செய்தி தெரிவிக்கின்றன. நேற்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ஹாடி ஹோ அப்துல்லா 71 சதவிகித இந்திய இளஞர்கள் குண்டர் கும்பலில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இந்திய சமூகத்தின் மீது எழுந்துள்ள இந்த விமர்சனத்தைப் போக்க இதை உடனடியாகத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.