கெய்ரோ, செப். 2– எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்ஸி ராணுவ புரட்சி மூலம் கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் ஒரு மறைவான இடத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தக் கோரி அவரது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மோர்ஸி பதவியில் இருந்தபோது தனக்கு வானளாவிய அதிகாரம் ஏற்படும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு (2012) டிசம்பர் 4–ந்தேதி அதிபர் மாளிகை முன்பு சுமார் 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாகினர். 1000 பேர் காயம் அடைந்தனர்.
இதன் மூலம் மோர்ஸி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டில் ஜனவரி மாதம் முபாரக்கை எதிர்த்து நடந்த கலவரத்தின்போது கெய்ரோ சிறையை உடைக்கப்பட்டு மோர்ஸியின் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளால் மீட்கப்பட்டனர். அந்த குற்றச்சாட்டும் மோர்ஸி மீது சுமத்தப்பட்டுள்ளது.