Home கலை உலகம் முதல் காட்சி திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

முதல் காட்சி திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

599
0
SHARE
Ad

Naiyaandi-அக்டோபர் 11 – சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ‘நைய்யாண்டி’.

‘நைய்யாண்டி’ படம் பார்க்கச் செல்லும் முன் கீழ்காணும் விஷயங்களை கவனித்து விட்டுச் சென்றால் ஏமாற்றமின்றி ஒரு இரண்டரை மணி நேரம் ரசித்துவிட்டு வரலாம்.

1. தனுஷ் படமாச்சே பொல்லாதவன், ஆடுகளம் போல நடிப்பில் கலக்கியிருப்பாரோ என்ற ஒரு எதிர்பார்ப்போடு போக வேண்டாம்!

#TamilSchoolmychoice

2. களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் படம் ஆச்சே  ‘நைய்யாண்டி’ வித்தியாசமான கதையாக இருக்குமோ என்றும் யோசித்து போக வேண்டாம்!

3. படம் வெளிவரதுக்கு முன்னாடியே இந்த நஸ்ரியா பொண்ணு இயக்குநர் மேல குற்றம் சாட்டி காவல்துறை வரை போச்சே ஒருவேளை இந்த படத்துல நஸ்ரியா ரொம்பவே கிளாமரா நடிச்சிருக்குமோ என்ற எண்ணத்தோடும் போக வேண்டாம்!

4. ‘நைய்யாண்டி’ தலைப்பே காமெடி படம்னு சொல்லுதே …படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குமோ என்று எண்ணி கூடவே வயித்து வலி மருந்தெல்லாம் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.

இதெல்லாம் எதையும் மனசுல வச்சுக்காம, டிக்கெட் விலை ஏறிப் போச்சேன்னு கவலைப்படாம படம் பார்த்தா நிச்சயம் ‘நைய்யாண்டி’ யை ரசிக்கலாம்.

முதல் பாதி இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 

படத்தின் முதல் பாதி…

கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமம்… அந்த கிராமத்தில் வேலை வெட்டியின்றி ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும்  4 வாலிபர்கள் (தனுஷ், சூரி, இன்னும் இருவர்)…

அவர்களுக்கு ‘நண்பர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பு… அதற்கு தனுஷ் தான் தலைவர்.

கோடீஸ்வர அப்பாவிற்கு மிகவும் செல்லப் பெண்ணான நஸ்ரியா நசிம் தனது பாட்டி ஊருக்கு திருவிழாவிற்கு வருகிறார். அவரைப் பார்த்த முதல் நாளே காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் தனுஷ்.

நஸ்ரியாவை காதலிக்க வைக்க தனுஷ் என்னென்னவோ ‘நைய்யாண்டி’ வேலைகளை செய்து இறுதியில் அவரைக் காதலிக்கவும் வைத்துவிடுகிறார்.

நஸ்ரியா – தனுஷ் காதல் விவகாரம் தெரியாமல் தனது பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விடுகிறார் கோடீஸ்வர தந்தை நரேன்…

அந்த மாப்பிள்ளை தான் கதையின் வில்லன்…

காதல் விவகாரம் நஸ்ரியாவின் அப்பாவிற்கும், வில்லன் மாப்பிள்ளைக்கும் தெரியவர தனுஷும், நஸ்ரியாவும் ஊரைவிட்டு ஓடி விடுகிறார்கள்…

இப்படியாக முதல் பாதி முழுக்க படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட கதைகளை சொல்லி படத்தை எப்படியோ ஓட்டி விடுகிறார் இயக்குநர் சற்குணம்.

Naiyaandi Movie First Lookஇரண்டாவது பாதி  ‘சிரிப்பு வெடி’

இரண்டாவது பாதியில் தான் நைய்யாண்டியே ஆரம்பிக்கிறது.

நஸ்ரியாவிற்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி தனது சொந்த வீட்டில், குத்துவிளக்கு தொழில் செய்யும் தனது அப்பாவிடம் கணக்காளராக சேர்த்து விடுகிறார் தனுஷ்.

தனது அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன் ஆகியோருக்கு கல்யாணம் ஆன பின்பு, நமது கல்யாண விவகாரத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என்றும் தனுஷ் நஸ்ரியாவை சமாதானப்படுத்துகிறார்.

இத்தனை வயது ஆகியும் கல்யாணம் ஆகாமல் முதிர்கண்ணன்களாக இருக்கும் ஸ்ரீமனும், சத்யனும் தங்கள் வீட்டில் இருப்பது தம்பியின் மனைவி என்று தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு நஸ்ரியாவை காதலிப்பது படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு விருந்து.

தனுஷின் அப்பாவாக வரும் பிரமிட் நடராஜன், அம்மாக வரும் நடிகை ஆகியோரும் அவர்கள் பங்கிற்கு படத்திற்கு கலகலப்பு சேர்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில், படத்தின் இரண்டாவது பாதி தொடங்கி படம் முடியும் வரை படம் பார்ப்பவர்களுக்கு சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் காட்சிகள் உள்ளன என்பது என்னவோ உண்மை.

படத்தின் இசை

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலை தனுஷ் தனது குரலில் பாடியிருக்கிறார்.

பாடல் காட்சிகள் அனைத்தும் படத்திற்கும், கதைக்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் வெளிநாடுகளில் படம்பிடித்திருக்கிறார்கள்.

படம் பார்த்த ஒரு ரசிகனாக சில கேள்விகள்download (1)

சமீப காலங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மிகச் சிறப்பாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் தனுஷ், ஒரு புதுமுக நடிகர் நடிக்க வேண்டிய ஒரு கதையை தேர்ந்தெடுத்தது ஏன்?

களவாணி, வாகை சூட வா போன்ற படங்களில் விமல் போன்ற புதுமுகங்களை நடிக்க வைத்து மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் சற்குணம், நடிப்பிற்காக விருது பெற்ற தனுஷ் போன்ற ஒரு நடிகர் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தாதது ஏன்?

‘வாகை சூட வா’ படத்தில் அவ்வளவு இனிமையான பாடல்களைக் கொடுத்த ஜிப்ரான் போன்ற நல்ல இசையமைப்பாளர் கிடைத்தும், பாடல் காட்சிகளைப் படமாக்க கும்பகோணம் போன்ற அழகிய இடங்கள் இருந்தும் அதற்கேற்ற காட்சிகளையும் கொடுக்காதது ஏன்?

தனுஷ், சற்குணம், ஜிப்ரான் கூட்டணி என்று ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு, டிக்கெட் விலை பற்றி கவலைப்படாமல் காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு திருப்தியான படத்தைக் கொடுக்காதது ஏன்?

மொத்தத்தில் ‘நைய்யாண்டி’ –  பழைய வண்டி…

– பீனிக்ஸ்தாசன்