Home அரசியல் சுங்கை லிமாவில் பிரச்சாரம் செய்ய மகாதீருக்கும், முக்ரீஸுக்கும் துணிச்சல் இருக்கிறதா? – அஸ்மின் சவால்

சுங்கை லிமாவில் பிரச்சாரம் செய்ய மகாதீருக்கும், முக்ரீஸுக்கும் துணிச்சல் இருக்கிறதா? – அஸ்மின் சவால்

471
0
SHARE
Ad

Azmin Aliகெடா, அக் 22 – துணிச்சல் இருந்தால் சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் பிரச்சாரம் செய்ய வரட்டும் என்று பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி(படம்) சவால் விடுத்துள்ளார்.

நேற்றிரவு சுங்கை லிமாவ் டாலாமில், இடைத் தேர்தலில் பாஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான முகம்மட் அஸாம் சமட்டை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அஸ்மின் அலி, “சுங்கை லிமாவ் தொகுதியை நாம் ஏன் தக்க வைக்க வேண்டும்? தேசிய முன்னணிக்கும், அம்னோவிற்கும், முக்ரிஸுக்கும் அம்னோ தேர்தலில் மக்கள் புறக்கணித்தது போல் இடைத்தேர்தலிலும் புறக்கணிப்பார்கள் என்பதை இங்குள்ள மக்கள் உணர்த்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அம்னோவே மகாதீரையும், முக்ரீஸையும் புறக்கணித்த பிறகு, நீங்கள் எதற்காக இடைத்தேர்தலில் அவர்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

தான் மகாதீரைக் கண்டு அச்சமடையவில்லை என்றும், தான் அல்லாவிற்கு மட்டுமே பயப்படுபவர் என்றும் கூறிய அஸ்மின், வரும் நவம்பர் 4 ஆம் தேதி தேசிய முன்னணியும், அம்னோவும் இடைத்தேர்தலில் தோற்கும் வரை தான் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முன்னாள் கெடா மந்திரி பெசாரும், சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.