Home உலகம் நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்

நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்

712
0
SHARE
Ad
rashata-eri-kalவாஷிங்டன், பிப்.14- இயற்கையின் படைப்பில் விண்ணில் நாள்தோறும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பல நமது கண்களுக்கு தெரிவதில்லை.
விண்ணில் இருந்து எரிகல்கள் என்று சொல்லப்படுகிற விண்கல்கள் பூமியை நோக்கி வந்து செல்வதையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். தினந்தோறும் 100 டன் அளவுக்கு எரிகல்கள் பூமியில் வந்து விழுகின்றன.
வாரந்தோறும் கார் அளவிலான விண்கல்களும் விழுகின்றன. அவை அளவில் சிறியவை என்பதாலும், பூமியின் அருகே நெருங்கும்போது பெரும் பகுதி எரிந்து விடுவதாலும் அவை பூமியில் விழுவதால் பெரிய பாதிப்பு ஏற்படுவது இல்லை.
இந்த நிலையில், விண்ணில் 2012 டிஏ14 என்கிற ராட்சத எரிகல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர்.
இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது ஆகும். கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த 2012 டிஏ14 நாளை (வெள்ளிக்கிழமை) சர்வதேச நேரப்படி இரவு 9.25 மணிக்கு பூமிக்கு அருகே வந்து கடந்து செல்லும்.
அபூர்வ நிகழ்வு இதுபற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி (பூமியை நெருங்கும் பொருட்கள் தொடர்பான திட்ட அலுவலக நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்) ஏமன்ஸ் கூறுவதாவது:- ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் வரும் 15-ந் தேதியன்று பூமிக்கு வெகு அருகாமையில் வரும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இத்தகைய எரிகல், பூமியுடன் மோதுவது உண்டு.
இந்த ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் போன்று ஒன்று பூமியில் விழுந்தால், அது கடந்த 1908-ம் ஆண்டு சைபீரியாவில் துங்குஸ்காவில் நடந்த சம்பவம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தும். (இந்தச் சம்பவத்தின்போது, 800 சதுர மைல் பரப்பளவில் மரங்களை தரை மட்டமானது நினைவுகூரத்தக்கது.)
இந்த எரிகல் விண்ணில் சுற்றி வருகிற செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அப்பால், ஆயிரத்து 950 கி.மீ. தொலைவில் கடந்து செல்லும்.
எனவே சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது பணியாற்றி வருகிற 6 விஞ்ஞானிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் நேராது. அவர்கள் இதை ஆராய்வதற்கும் வாய்ப்பு இல்லை. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஏராளமான செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அவை இருக்கும் பகுதியை விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏதாவது செயற்கை கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என  அவர் கூறினார்.
இந்த எரிகல்லை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆற்றல் வாய்ந்த புவி ஆர்வலர்கள், அறிவாளிகள் இந்த எரிகல்லை பைனாகுலர் அல்லது சிறிய அளவிலான டெலஸ்கோப் மூலம் காண முடியும் என தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இரவு நேரத்தில் இந்த எரிகல்லைப் பார்க்க முடியும். இந்தோனேஷியாவில் இருந்து பார்க்கிறபோது, இந்த எரிகல்லை மிக அருகாமையில் காண இயலும்.
அனேகமாக இந்த எரிகல், மணல்பாறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.