Home கலை உலகம் நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரத்தில் புதிய திருப்பம்!

நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரத்தில் புதிய திருப்பம்!

585
0
SHARE
Ad

preity-zintaடெல்லி, ஜூன் 19 – இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, பாம்பே டையிங் குரூப் தொழில் அதிபர் நெஸ் வாடியா இடையேயான 5 வருட காதல் 2009-ஆம் ஆண்டு முறிந்தது. ஆனால் அவர்களின் தொழில் உறவு நீடிக்கிறது. ஐ.பி.எல். போட்டி அணிகளில் ஒன்றான ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக அவர்கள் நீடிக்கிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் காதலரான நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடந்த வாரம் போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த மாதம் 30-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது தன்னை அவர் பலரது முன்னிலையில் மானபங்கப்படுத்தியதாக புகாரில் தெரிவித்தார்.

அதன் பேரில் மும்பை மெரின் டிரைவ் போலீசார் மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நெஸ் வாடியா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

சம்பவத்தன்று வான்கடே மைதானத்தில் பிரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா அருகில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நெஸ் வாடியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன்பு பிரீத்தி ஜிந்தாவிடம் விரிவான வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் வெளிநாடு சென்று விட்டதால், இந்த வார இறுதிக்குள் நேரில் ஆஜராகும்படி போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையில் பிரீத்தி ஜிந்தா – நெஸ் வாடியா இடையே சமரச முயற்சி நடப்பதாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் வழக்கில் மற்றொரு திருப்பமாக பாலியல் புகாருக்கு ஆளான நெஸ் வாடியாவுக்கு, நிழல் உலக தாதா ரவி பூஜாரியிடம் இருந்து மிரட்டல் வந்து உள்ளது.

இது தொடர்பாக நெஸ் வாடியாவின் தந்தையும், தொழில் அதிபருமான நுஸ்லி வாடியாவின் செயலாளரின் மொபைல் போனுக்கு நிழல் உலக தாதா ரவி பூஜாரி என்று கூறிக்கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த போனுக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டது. அதில், “நடிகை பிரீத்தி ஜிந்தா பின்னால் திரியக்கூடாது, இந்த குறுந்தகவலை வாடியாவுக்கு தெரிவிக்க வேண்டும். பிரீத்தி ஜிந்தாவுக்கு தொல்லை கொடுத்தால், வாடியாவின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்.எம். ஜோஷிமார்க் போலீசில் வாடியா நிறுவனம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் நுஸ்லி வாடியாவின் செயலாளர் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.

மேலும் மிரட்டல் வந்த செல்பேசி நுஸ்லி வாடியாவின் செயலாளருக்கு சொந்தமானதா? அல்லது வாடியா குடும்பத்தினருக்கு சொந்தமானதாக என்பதை தெரிவிக்கவும் போலீசார் மறுத்தனர்.

இந்த மிரட்டல் வழக்கு விசாரணை என்.எம். ஜோஷி மார்க் போலீசில் இருந்து குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. செல்பாசியில் மிரட்டல் விடுத்தது தாதா ரவி பூஜாரி தானா? மற்றும் அந்த போன் அழைப்பு எங்கிருந்தது வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.