Home உலகம் ஈராக் தீவிரவாதிகளால் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல் – ஒபாமா கவலை!

ஈராக் தீவிரவாதிகளால் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல் – ஒபாமா கவலை!

628
0
SHARE
Ad

obama,வாஷிங்டன், ஜுன் 24 – ஈராக்கில் கடும் போரிட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உலகுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். ஈராக்கில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா கூறியதாவது,

“ஈராக்கில் போரிட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின், தீவிரவாத சித்தாந்தம் இடைக்கால மற்றும் நீண்டகால அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக ஏராளமான திட்டங்களுடன் அங்கு பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக நாம் இடைவிடாத கண்காணிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.”

obama“இது போன்ற இயக்கங்கள் வன்முறையை பிரயோகித்து, ஒரு நாட்டின் எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது, உள்ளூர் மக்கள் அவர்களை புறக்கணித்து விடுகின்றனர். ஈராக் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சன்னி தீவிரவாத குழுக்களை அந்நாட்டின் மக்களும் புறக்கணிப்பார்கள்.”

#TamilSchoolmychoice

“தற்போது, ஒரு நாட்டின் ஆளுமையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நிலைகுலைய வைத்து வருவது தான் நமக்கு கவலையளிக்கும் பிரச்சனையாக உள்ளது. சிரியாவில் நடக்கும் போரிலும் பங்கேற்று வரும் இவர்கள் அந்நாட்டில் இருந்து அதிக ஆயுதங்களையும், வளங்களையும் கவரக் கூடும். ஈராக் நிலைகுலைந்துப் போனால், அந்த தாக்கம் ஜோர்டான் போன்ற நமது நேச நாடுகளுக்கு பரவக் கூடும்.”

“இத்தகைய தீவிரவாத குழுக்களை அழிக்க அவர்களை விட அதிக கூர்மையான, உரிய இலக்கு தொடர்பான திட்டமிட்ட போர் தந்திரத்தை நாம் கையாள வேண்டியுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.