Home நாடு ராயர் வீட்டு வாசல் முன்னால் உரிக்கப்பட்ட மாட்டின் தலை!

ராயர் வீட்டு வாசல் முன்னால் உரிக்கப்பட்ட மாட்டின் தலை!

645
0
SHARE
Ad

rayerஜியோர்ஜ் டவுன், ஜூன் 28 – அம்னோ கட்சியினரை ‘செலாக்கா’ என பினாங்கு மாநில சட்டமன்றத்தில் கூறியதன் மூலம் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வீட்டு வாசல் கதவின் முன்னால் உரிக்கப்பட்ட மாட்டின் தலை ஒன்று போடப்பட்டு இருந்தது.

ராயரின் மனைவி இன்று சனிக்கிழமை காலை 7.00 மணியளவில், ஐலண்ட் பார்க், திங்காட் தெம்பாகா, பகுதியிலுள்ள தன் வீட்டின் முன் வாசல் கதவை திறந்த போது இந்த கொடூரமான காட்சியைக் கண்டதாக ராயர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் முன்னால் மாட்டின் தலையொன்றை கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, வெளியே வந்து பார்த்த பின்னர், தான் பினாங்கு முதல்வரிடமும், காவல் துறையினரிடமும் புகார் செய்ததாக ராயர் தன் வீட்டுக்கு வந்த பத்திரிக்கையாளர்களிடம் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பர் என தான் நம்புவதாகவும் ராயர் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வடகிழக்கு பிரதேச காவல் துறை தலைவர் ஏசிபி மியோர் ஃபரிடால்திராஷ் வாஹிட், அந்தப் பகுதியின் படக் கருவியின் வழி எடுக்கப்பட்ட காணொளிகளின் மூலம் ராயர் வீட்டின் முன்னால் ஒரு நபர் காணப்படுவது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

“மோட்டார் சைக்கிளில் வரும் ஒரு நபர் உரிக்கப்பட்ட மாட்டின் தலையை ராயரின் வீட்டின் வைப்பது, காணொளிகளின் மூலம் தெரிகின்றது. அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க புலனாய்வுகள் தொடரப்படுகின்றன” என்றும் வாஹிட் தெரிவித்துள்ளார்.

மதங்களை இழிவுபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு, பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ராயருக்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டுமென்றார் நேரடியாக சொல்லுங்கள். அதற்கு மாறாக, நமது பல இன மலேசிய சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத – இழிவுபடுத்தும் விதமான நடவடிக்கைகளில் இறங்காதீர்கள்” என்றும் தெங் கேட்டுக் கொண்டார்.

இது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கூறுவது போல் சிறிய விவகாரமல்ல என்றும் தெங் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்திருந்த அகமட் சாஹிட் ராயர் அம்னோ தலைவர்களுக்கு எதிராக உதிர்த்த ‘செலாக்கா’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் காரணமாக நிகழ்ந்த பதிலடிதான் இது எனக் கூறியிருந்தார்.

-பெர்னாமா