Home நாடு மோகனா முனியாண்டிக்கு எதிராக பினாங்கு மஇகா மகளிர் பிரிவினர் போர்க்கொடி

மோகனா முனியாண்டிக்கு எதிராக பினாங்கு மஇகா மகளிர் பிரிவினர் போர்க்கொடி

591
0
SHARE
Ad

Mugambigai MIC Bagan Div Women leaderபினாங்கு, ஆகஸ்ட் 15 – அண்மையில் நடந்து முடிந்த பினாங்கு மாநில மஇகா மகளிர் மாநாடு ஒரு சர்வதிகார மாநாடு என்பதைக் காட்டுகிறது என்பதால், உங்கள் சர்வாதிகாரத்தை பினாங்கில் கொண்டு வந்து திணிக்காதீர்கள் என்று மஇகா மகளிர் அணி தேசியத் தலைவி மோகனா முனியாண்டிக்கு, பினாங்கு பாகான் தொகுதி மகளிர் தலைவி மூகாம்பிகை (படம்) அறிவுறுத்தியுள்ளார்.

பினாங்கு மாநில மகளிர் மாநாடு தொடர்பாக யார் யார் பேராளர்கள், யாருக்கு கருத்துரைக்கும் உரிமை உள்ளது, மஇகா மகளிர் சட்டவிதி 52 பிரிவின்படி மாநாடு கூட்டக் கோரத்துடன் நடைபெற்றதா என்று மகளிர் தேசியத் தலைவி விளக்கமளிக்க வேண்டும் என்றும்,

சட்டவிதியை பின்பற்றாமல் நடந்த பினாங்கு மகளிர் மாநாடு மீண்டும் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் மஇகா பாகான் தொகுதி மகளிர் தலைவி சி.மூகாம்பிகை கோரிக்கை விடுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இவருடன் மற்ற சில மாநில மகளிர் தொகுதி தலைவிகளும் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

கடந்த வாரம் செபராங் ஜெயா சஃபீரா கிளப்பில் நடந்த மகளிர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காத மாநிலத் தலைவியும், தேசியத் தலைவியும், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத மகளிர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தியது மஇகா மகளிர் சட்டவிதிக்கு புறம்பானது என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Penang MIC Women with Mugambigai 600 x 400

இடமிருந்து நான்காவதாக நிற்கும் பினாங்கு பாகான் தொகுதி மகளிர் பகுதி தலைவி மூகாம்பிகையோடு இணைந்துள்ள மற்ற மகளிர் தலைவிகள்…

மேலும் 494 மகளிர் தலைவிகள் உள்ள பினாங்கு மாநிலத்தில் குறைந்த பட்சம் 148 மகளிர் பேராளர்கள் கலந்துக்கொள்வதுதான் கூட்டத்தின் குறைந்தபட்ச நிர்ணயமாக (கோரம்-Quorum) இருக்கும்,

ஆனால் அன்று கூட்டத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 45 பேர்கள் மட்டுமேஎன்பதுடன்,  அதிலும் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மகளிர்களில் பலர் மஇகா உறுப்பினர்கள் அல்ல என்றும்  சிலர் அரசு சார்பற்ற இயக்கங்களில் இருந்து வருகை அளித்தவர்கள் என்பதும் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என மூகாம்பிகை மேலும் கூறினார்.

கூட்டத்திற்கான கோரம் உள்ளதா என்று கேட்டதற்கும் முறையான பதில்  கிடைக்கவில்லை என்றும் மூகாம்பிகை குறை கூறினார்.

“பினாங்கு மஇகாவைப் பொறுத்தவரையில் முறையான சட்டவிதிப்படி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பெரும்பான்மை மகளிர் தலைவிகள் விருப்பம் கொண்டுள்ளார்கள்.  ஆனால் மஇகா தேசியத் தலைவி மோகனா முனியாண்டி அவருக்கு வேண்டியவர்களை கையில் போட்டுக்கொண்டு சர்வதிகார போக்கில் மகளிர்களை ஆட்டிப்படைப்பதும், இரு வேறு விதிகளை கடைப்பிடித்து மகளிர்களை பிளவு படுத்துவதும் ஒரு தேசியத் தலைவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தராது” என்றும் மூகாம்பிகை சாடியுள்ளார்.

“அண்மையில் கூட்டரசு பிரதேசம், நெகரி மாநில மகளிர் மாநாடுகளை குறைந்தபட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்று காரணம் காட்டி ஒத்தி வைத்த மகளிர் தலைவி மோகனா, பினாங்கில் மட்டும் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையிலும், சர்வாதிகாரப் போக்கில் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தியதன் உள்நோக்கம் என்ன,  பினாங்கு மாநில மகளிர் அணியை இரண்டாக உடைக்க நடத்தும் சதித்திட்டமா” என்றும் மூகாம்பிகை கேள்வி தொடுத்துள்ளார்.