Home கலை உலகம் ‘சம்பந்தன்’ – மலேசியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம்!

‘சம்பந்தன்’ – மலேசியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம்!

1003
0
SHARE
Ad

IMAG0182 கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – ஃபெனோமினா சினி புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பிரபல மலேசிய இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சம்பந்தன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தலைநகர் ஜாலான் ஈப்போவிலுள்ள தங்குவிடுதி ஒன்றில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாட்டின் பல்வேறு ஊடகங்கள் சார்பாக செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். சம்பந்தன் திரைப்படத்தின் முன்னோட்டமும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் எஸ்.டி.பாலா, துணை இயக்குநர் ரோனிக்கா, ஒளிப்பதிவாளர் பூபா, கலை இயக்குநர் (Art Director) ரஜினி காந்த், படத்தொகுப்பாளர் லோகேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசிய வரலாற்றில், மலேசிய இந்திய மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்டு, அவர்களுக்கு ஓர் தலைச்சிறந்த தலைவராக திகழ்ந்த வீ.தி. துன் சம்பந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, பல உண்மைச் சம்பவங்களை கண்டறிந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்.டி.பாலா தெரிவித்தார்.

IMAG0192

நாடகத்துறையில் பல ஆண்டுகாலம் அனுபவம் பெற்ற இயக்குநரான எஸ்.டி.பாலா, இந்த திரைப்படத்திற்காக பல நாட்கள், சம்பந்தன் அவர்கள் பிறந்த ஊரான பேராக் மாநிலம், சுங்கை சிப்புட்டில் தங்கி ஆராய்ச்சி செய்து, சம்பந்தனின் வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் சந்தித்து, அவர்கள் மூலமாக இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் எஸ்.டி.பாலா கூறுகையில், “இந்த படத்தில் 60-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை உருவாகத் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடைபெறுவதற்கு சுமார் 8 மாத காலம் எடுத்துக் கொண்டது. மலேசிய இந்திய மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த மாபெரும் தலைவர் துன் சம்பந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு மலேசிய இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இந்த படம் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இதில் மலாய்காரர்கள், சீனர்கள் என பலர் நடித்துள்ளதால், இது ஒட்டுமொத்த மலேசியர்களுக்கான படம். இந்த படத்தில் சம்பந்தனின் வாழ்வில் நடந்த பல உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை வரலாற்றில் கூட சொல்லப்படாத பல விஷயங்கள் இந்த படத்தில் கூறப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மலேசியாவின் 57 -வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 31 -ம் தேதி வருவதை முன்னிட்டு, இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி, நாடெங்கிலும் சுமார் 19 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம் என்ன?

2. மலேசியர்கள் ஏன் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும்?

3. வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவரின் வாழ்க்கையை திரையில் கொண்டு வர எஸ்.டி.பாலா மற்றும் குழுவினர் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

4.  1960 – ம் ஆண்டு கால கதைக்கு ஏற்ப இந்த திரைப்படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்ன?

5. இந்த திரைப்படம் தயாரிக்க ஆன மொத்த செலவு என்ன?

6. இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு வந்திருக்கும் ஓர் புதிய சிக்கல் என்ன? 

மேற்கண்ட கேள்விகளுக்கான பல சுவையான பதில்களும், சுவாரஸ்யமான தகவல்களும் நாளை தொடரும்…

 

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்