தாங்களாகவே முன்வந்து கணக்கு விவரங்களை தெரிவித்தால், குறைவான தண்டனை கிடைக்கும் என அறிவுறுத்தி இருந்தனர் வருமான வரித்துறையினர். இதன் மூலம் ரூ.50 கோடி முதல் ரூ.80 கோடி வரை வரி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கருப்பு பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
வரி ஏய்ப்பை தடுப்பதற்காக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு (ஓஇசிடி) என்ற அமைப்பு மூலம் சர்வதேச ஒப்பந்த விதிமுறையின்படி, சுவிட்சர்லாந்துடன் இந்தியா உட்பட 36 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதன் மூலம், வரி தொடர்பான தகவல்களை இந்த நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்தியா கேட்டது.
ஆனால், உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் கணக்கு விவரங்களை தெரிவிக்க சுவிஸ் அரசு மறுத்து விட்டது. இருப்பினும், மறைமுக உதவிகளின்மூலம் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்கு விவரம் அடங்கிய பட்டியல் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
இவர்கள் டெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை, சண்டிகர், மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ளனர். இவர்களிடம் நேரடி பேரத்தில் ஈடுபட வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அறிவுறுத்தியது.
வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு அளிக்கப்படும் குறைவான தண்டனை பெறலாம் என கணக்கு வைத்திருப்பவர்களிடம் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் பேரம் பேசியுள்ளனர்.
இதற்கு பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சமரச திட்டத்தின் மூலம் ரூ.50 கோடி முதல் ரூ.80 கோடி வரி கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த சமரச முயற்சி நடக்கும் அதே நேரம், இவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது என்பதை அறியவும்,
இதன் பின்னணியில் வேறு ஏதாவது வரி ஏய்ப்பு சம்பவம் நடந்துள்ளதா என்பதை கண்டறியும் நடவடிக்கையிலும் வருமான வரித் துறையினர் இறங்கியுள்ளனர்.