பயனர்கள் இடையே குறுந்தகவல், ஒலி, ஒளி கோப்புகள் பரிமாற்றம் போன்றவற்றிற்கு மிகச் சிறப்பாகப் பயன்படும் வாட்ஸ்அப் செயலியினை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடும் போட்டியிட்டன. இறுதியாக பேஸ்புக் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாட்ஸ்அப் செயலியை தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக்கியது.
இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பை விட சிறந்த செயலியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கூகுள் இறங்கி உள்ளது. எதிர்வரும் 2015-ம் ஆண்டிற்குள் கூகுள் தனது புதிய செயலியை அறிமுகப்படுத்தும் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த புதிய செயலியானது, வாட்ஸ்அப் போன்று அல்லாமல் பல்வேறு புதிய வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக இந்திய மொழிகளை அங்கீகரிக்கக் கூடியதாகவும், குரலை எழுத்துக்களாக பதிவு செய்யும் வசதி போன்ற பல புதிய வசதிகளை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
கூகுள் நிறுவனம் சமீப காலங்களில் இந்தியாவை முன்னிலைப்படுத்தி தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதற்கு முக்கியக் காரணம் இந்தியாவின் மக்கள் தொகையும், பன்முகச் சந்தைகளும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள நினைக்கும் பயனர்களின் ஆர்வமும் தான் என கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.