Home நாடு சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

523
0
SHARE
Ad

Saravanan-Sliderகோலாலம்பூர், டிசம்பர்  9 – கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இன்றைய தேதியில் மஇகாவின் உதவித் தலைவர்கள் யார்? என்பதும் அவற்றுள் முக்கியமான ஒரு கேள்வியாகும்.

கடந்த ஆண்டு மஇகா தேர்தல் நடைபெற்ற வேளையில், டத்தோ எம்.சரவணனும், டத்தோ எஸ்.கே.தேவமணியும் உதவித் தலைவர்களாகப் பதவி வகித்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது மஇகா உதவித் தலைவர்கள் பதவி மற்றும் ஒட்டுமொத்த மத்திய செயலவைக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என சங்கப் பதிவகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அத்தகைய மறுதேர்தல் நடைபெறும் வரை, சரவணனும், தேவமணியும்தான் உதவித் தலைவர்களாகச் செயல்பட முடியும்.

sk-devamany-jan17-300x202
எஸ்.கே.தேவமணி

“சங்கப் பதிவதிகாரியின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்புவரை செயல்பட்ட மத்திய செயலவைக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது,” என்கிறார் மஇகாவின் சட்ட விதிமுறைகளை நன்கறிந்த, பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் ஒருவர்.

மஇகாவின் சட்டப் பிரிவு எண் 47இன் படி தேர்வு செய்யப்பட்ட மத்திய செயலவை நிர்வாகிகள் 3 ஆண்டு காலம் அப்பதவியை வகிப்பவர். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அல்லது மறுதேர்தல் நடைபெறும் வரை அப்பதவியில் அவர்கள் நீடிக்கலாம் என்கின்றன கட்சியின் சட்டவிதிமுறைகள்.

கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டில் மஇகா உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 2012ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும்.

எனினும் அச்சமயம் 13ஆவது பொதுத் தேர்தலை காரணம் காட்டி, மஇகா தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் 2013ஆம் ஆண்டு நவம்பரில் அந்த தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு காரணமாக, கடந்தாண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பிருந்த மத்திய செயலவை உறுப்பினர்களும், உதவித் தலைவர்களும் தன்னாலேயே மீண்டும் அப்பதவிக்கு உரியவர்களாகின்றனர்.

எனவே அடுத்து தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் அப்பதவிகளில் நீடிப்பர்.

அப்படிப் பார்க்கையில் சரவணன், தேவமணி ஆகிய இருவருமே சட்டவிதிகளின்படி மஇகாவின் நடப்பு உதவித் தலைவர்கள் ஆவர்!