Home நாடு சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வரும் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் நுழைவுக் கட்டணம்

சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வரும் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் நுழைவுக் கட்டணம்

475
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 23 – சிங்கப்பூரிலிருந்து வரும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் 20 ரிங்கிட் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2015ஆம் ஆண்டு மத்தியில் இருந்து இக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.ஆனால் தாய்லாந்திலிருந்து தீபகற்ப மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்களுக்கும் புருணையிலிருந்து சபா, சரவாக் மாநிலங்களுக்குள் நுழையும் வாகனங்களுக்கும் இத்தகைய கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை.

Johor-Singapore_Causeway
சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குள் கார்கள் நுழைவதற்கான இணைப்புப் பாலத்தின் தோற்றம்

தற்போது வார இறுதி மற்றும் சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் அல்லாத மற்ற தினங்களில் சிங்கைக்குள் நுழையும் வாகனங்களுக்கு – 4 சக்கர வாகனங்களுக்கு சிங்கை டாலர் 35 மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு சிங்கை டாலர் 4 – என நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.சிங்கப்பூர் – மலேசியா இடையே தினந்தோறும் சுமார் 4 லட்சம் வாகனங்கள் பயணம் மேற்கொள்கின்றன.

#TamilSchoolmychoice

“ஜோகூரில் உள்ள இரு நுழைவு வாயில்களிலும், புதிய வாகன நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு முன் அதுகுறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படும். புதிய நுழைவுக் கட்டணம் விதிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் ஜனவரி மாதம் முதல் அமல் படுத்தப்பட இருந்த இத்திட்டம் அடுத்த ஆண்டு மத்திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டண வசூலிப்பிற்கான புதிய இயந்திரங்களை நிறுவுவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்காக இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது” என போக்குவரத்துத் துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

“ஜோகூரில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும் தாய்லாந்து மற்றும் புரூனே எல்லைப் பகுதிகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.