Home வணிகம்/தொழில் நுட்பம் வெற்றி பெற்ற கோடீஸ்வரர்களின் தாரக மந்திரங்கள்!

வெற்றி பெற்ற கோடீஸ்வரர்களின் தாரக மந்திரங்கள்!

1085
0
SHARE
Ad

Foreign Currenciesகோலாலம்பூர், டிசம்பர் 30 – ஆதி காலத்தில் மனிதனின் முக்கியத் தேவை உணவு. அதற்காக அவன் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. நவீன யுகத்தில் மனிதர்களின் பயணம் பணத்தை நோக்கித் திரும்பியது. அதற்காக நாம் அன்றாடம் கொடுத்து வரும் உழைப்பு, ஆதிமனிதனை விட அதிகம்.

எனினும், பண ரீதியாக அனைவராலும் வெற்றி பெற முடியவில்லை. பணம் சேர்க்க உடல் சார்ந்த உழைப்பு மட்டுமே போதுமானதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே அறிவார்ந்தவர்களின் வாக்காக இருக்கும்.

நம் கண்முன்னே பெரும் பணக்காரர்களாய் இருந்து வரும் பெரும்பாலானோர்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், நிதியை கையாள்வதிலும், இலக்குகளை அடைவதிலும் அவர்கள்  கடைபிடித்த தாரக மந்திரங்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கீழே தொகுக்கப்பட்டுள்ள அந்த தாரக மந்திரங்கள் நம்மில் சிலருக்கும் வழிகாட்டியாய் அமையும் என நம்பலாம்.

நேரம்:

காலச்சக்கரம் யாருக்காகவும் சுழல்வதை நிறுத்தப்போவதில்லை. நிதியைக் கையாள்வதில் வெற்றி அடைந்த அனைவரும், நேரத்தை கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். அவர்களின் முக்கிய முதலீடே நேரம் என்பது  குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குறித்த நேரத்தில் எட்டப்படும் இலக்குகளே வெற்றியாக கருதப்படுகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தயாராகுதல், திட்டமிடுதல்:

“தயாராகத் தவறியவன், தோல்விக்கு தயாராகிறான்” – வெற்றிக்கு தயாராகுதல் குறித்து பெஞ்சமின் பிராங்க்லின் கூறியது. வெற்றிகரமான முயற்சியின் முதல் படியே   திட்டமிடுதல்.

இது நிதியை கையாள்வதிலும் பொருந்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.நிதியை பொறுத்தவரையில் திட்டமிடுதலை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கின்றனர் ஒன்று நிதி சார்ந்த திட்டம் மற்றொன்று இலக்குகளை வரையறுத்தல்.

இலக்குகளை, காலம் சார்ந்து மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, இலக்குகளை குறுகிய கால இலக்குகள், மத்திய கால இலக்குகள், நீண்ட கால இலக்குகள் என்று பிரிக்க வேண்டும். குறுகிய கால இலக்குகளை குறித்த நேரத்தில் அடைவதன் மூலம் நாம் நீண்ட கால வெற்றிக்கு அருகில் பயணிக்கிறோம் என்பதை உறுதி படுத்திக் கொள்கிறோம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

வரவு, செலவு கணக்கீடு:

வரவு, செலவுகளை கணக்கில் கொள்ளாதவர்கள், நிதியைக் கையாள்வதில் தோல்வியுறுகின்றனர். அதனை கருத்தில் கொள்ளாத வரை நிதியை திறம்பட நாம் கையாள முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

சேமிப்பு:

“முதலில் சேமியுங்கள் பின்னர் செலவழியுங்கள்” என்பதே நிதியை கையாள்வதில் வெற்றி பெற்றவர்கள் நமக்கு தெரிவிப்பது. ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட சேமிப்பு, நாளைய முன்னேற்றத்திற்கு வடிகாலாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறியவை அனைத்தும் நமக்கு புதியதானவை அல்ல. எனினும், வெற்றிபெற்றவர்கள் அனைவரும் இதனை திறம்படக் கையாண்டதால், வெற்றி அவர்களின் வசமானது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேற்கூறப்பட்ட கருத்துகள் ஏற்கனவே பல தருணங்களில் நாம் கேட்டதுதான். ஆனால், அதனைப் பின்பற்றுவதில்தான் வெற்றியின் சூட்சுமமும் அடங்கியுள்ளது.