Home இந்தியா ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி!

389
0
SHARE
Ad

jayalalithaaபெங்களூரு, ஜனவரி 2 – தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் சிறப்பு அமர்வின் நீதிபதியாக குமாரசாமியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது.

இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று பெங்களூர் தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி, சசிகலா, இளவரசி,சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அக்டோபர் 17-ஆம் தேதியன்று இடைக்கால நிபந்தனை ஜாமீன் கொடுத்தது உச்சநீதிமன்றம்.

அத்துடன் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மேல்முறையீட்டு மனுவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தது.

பின்னர் கடந்த 18-ஆம் தேதியன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை சிறப்பு அமர்வு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

நாள்தோறும் விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் இம்மனுவை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான இடைக்கால நிபந்தனை ஜாமீனை ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.

அதே நேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறப்பு அமர்வு அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுமுறைக்குப் பின்னர் நாளை முதல் இயங்க உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமியை நியமித்து கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நாளை முதல் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது. நீதிபதி குமாரசாமி கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர்.